கொரோனா இரண்டாவது அலையில் 776 டாக்டர்கள் மரணம் - தமிழகத்தில் பேர் 50 பலி
கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி இந்தியாவில் இதுவரை 776 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
டெல்லி: கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையில் சிக்கி இந்தியாவில் இதுவரை 776 மருத்துவர்கள் பலியாகி உள்ளதாக இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது. அதிக அளவாக பீகார் மாநிலத்தில் 115 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் 50 டாக்டர்கள் பலியாகியுள்ளனர்.
கோவில்களைக் கூட மூட வைத்தது கொரோனா என்று பலரும் கிண்டலடித்தாலும் மக்களைக் காக்க மனித உருவத்தில் மருத்துவமனைகளில் கடவுள்களாய் மருத்துவர்கள் நடமாடிக்கொண்டிருக்கின்றனர் என்று பலரும் பதிலடி கொடுத்தனர்.

பல கோடி உயிரை காத்த மருத்துவர்கள், முன்களப்பணியாளர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாவின் முதல் அலை 748 டாக்டர்களை பலி கொண்டது என இந்திய மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை நாடு முழுவதும் தீவிரமடைந்தது. தினசரி பாதிப்பு 4 லட்சம் பேரை கடந்தது. லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் தினசரி பாதிப்பு 50 ஆயிரம் பேராக குறைந்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை தினசரியும் ஆயிரக்கணக்கான மக்களை காவு வாங்கியது. இதில் மருத்துவ துறையினரும் அதிக அளவில் பலியானார்கள். கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த ஏராளமான டாக்டர்களின் இன்னுயிரும் பறிபோனது.
இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள செய்தியில், நாட்டில் கொரோனா இரண்டாவது அலையில் 776 மருத்துவர்கள் உயிரிழந்து உள்ளனர்.
அவர்களில் அதிக அளவாக பீகார் மாநிலத்தில் 115 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து டெல்லியில் 109 பேரும், உத்தர பிரதேச மாநிலத்தில் 79 பேரும் மேற்கு வங்காளத்தில் 62 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தில் 44 பேரும் உயிரிழந்துள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் 39 பேரும் ஒடிசாவில் 34 பேரும் மற்றும் மகாராஷ்டிராவில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.
தென்னிந்திய மாநிலங்களில் தமிழகத்தில் 50 பேரும் ஆந்திர பிரதேசத்தில் 40 பேரும் கேரளாவில் 24 பேரும் கர்நாடகாவில் 9 டாக்டர்களும் மரணமடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் முன் கள பணியாளர்களாக பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள், காவல்துறையினரும் அதிகமாக பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் பல பேர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications