மணிப்பூர் பாஜக அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. சொந்த கட்சி MLA-க்களே பிரதமருக்கு கடிதம்!
டெல்லி: மணிப்பூர் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக 8 பாஜக எம்.எல்.ஏக்கள் மற்றும் ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குக்கி பழங்குடியினருக்கு இடையே கடந்த ஏப்ரல் மாதம் பெரும் கலவரம் ஏற்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் வன்முறை தொடங்கிய மணிப்பூரில், இன்னும் ஓயாமல் மோதல் வெடித்து வருகிறது. 45 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றும் வரும் இந்த மோதலில், அண்மைக்காலமாக பாதுகாப்புப் படையினர் மற்றும் கலவரக்காரர்களுக்கு இடையே வன்முறை வெடித்து வருகிறது.

இந்த வன்முறையில் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், நிர்வாகிகள், அலுவலகங்கள் தீக்கிரையாக்கப்பட்டு வருகின்றன. வன்முறையால் மேலும் உயிர்ப்பலி எண்ணிக்கை தொடர்ந்து வருகிறது. மணிப்பூரில் நிலவி வரும் மோதல் நாளுக்கு நாள் வலுத்து வரும் நிலையில், சூழலை கட்டுக்குள் கொண்டுவர பாஜக அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
மணிப்பூரைச் சேர்ந்த 10 அரசியல் கட்சிகள் டெல்லிக்குச் சென்று பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆகியோரை சந்தித்து மணிப்பூரில் உள்ள சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து விளக்கி, வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர வலியுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த 8 மணிப்பூர் மாநில எம்.எல்.ஏக்கள் மற்றும் அரசுக்கு ஆதரவளித்த சுயேட்சை எம்.எல்.ஏ என 9 பேர் மணிப்பூர் அரசு மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்து போயுள்ளதாக பாஜக எம்.எல்.ஏக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கரம் ஷியாம்சிங், ராதே ஷியாம்சிங், நிஷிகாந்த் சிங் உள்ளிட்ட 8 பாஜக எம்.எல்.ஏக்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். பிரதமருக்கு தற்போது கடிதம் எழுதியவர்களில் 4 பாஜக எம்.எல்.ஏக்கள் தற்போதைய முதலமைச்சர் பைரேன் சிங்கின் செயல்பாடுகளுக்கு ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூரில் பைரேன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடக்கிறது. மணிப்பூரில் மொத்தம் உள்ள 23 பாஜக எம்.எல்.ஏக்களில் 8 பேர் முதல்வர் பைரேன் சிங்குக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். இந்த 8 பேரும் மைத்தேயி இனக்குழுவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசால் வன்முறையை கட்டுப்படுத்த முடியாத காரணத்தால் மத்திய அரசு தலையிட வேண்டும் என இந்த எம்.எல்.ஏக்கள் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்து மனு அளித்தனர். இந்நிலையில் பிரதமர் மோடிக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். இதனால் மணிப்பூரில் ஆளும் பாஜக அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications