உக்கிரமடையும் உக்ரைன் - ரஷ்யா போர்: மோடி தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனைக்குழு கூட்டம்
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது.
டெல்லி:ரஷ்யா உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனை நடத்தப்பட இருக்கிறது. இந்தியர்களை மீட்பது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Recommended Video
உக்ரைனில் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து வான்வெளி மற்றும் நேரடி ராணுவ படைகள் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்கள் சிதைந்து போயுள்ளன.

உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு சார்பிலும் டெல்லியில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. உக்ரைனில் உள்ள இந்தியர்களுக்கு உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. அங்கு சிக்கியுள்ள மாணவர்கள், பணியாளர்களை பாதுகாப்புடன் மீட்க வேண்டும் என்று பல தரப்பிலும் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், உக்ரைனின் அண்டை நாடுகளான ருமேனியா, ஹங்கேரி நாடுகளின் வழியே இந்தியர்களை மீட்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவுறுத்தல்களையும் மத்திய அரசு வழங்கியுள்ளது.
உக்ரைனில் இருந்து தரைவழியாக ருமேனியா, ஹங்கேரி நாடுகளுக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலமாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதற்காக முதற்கட்டமாக இரண்டு விமானங்களை மத்திய அரசு, ருமேனியாவிற்கு அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது
இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல் குறித்து ரஷ்ய அதிபர் புடினுடன் இந்திய பிரதமர் மோடி பேசினார். அப்போது அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு பற்றி கோரிக்கை விடுக்க, அதற்கான அறிவுரைகள் வழங்கப்பட்டதாக புடின் கூறியதாக ரஷ்ய அதிபர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைனிலுள்ள மாணவர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அதிபர் புடின் உறுதியளித்துள்ளார்.
இதனிடையே, ரஷ்யா உக்ரைன் போர் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் நாளை உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் கூட்டத்தில் இந்தியர்களை மீட்பது குறித்து ஆலோசனை நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சூழ்நிலையில் உக்ரைனில் இருந்து நாடு திரும்ப விரும்புபவர்களுக்கு விமான கட்டணம் உள்ளிட்ட பயணச்செலவை மத்திய அரசே ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications