விடாத தமிழ்நாடு.. கொடுக்காத கர்நாடகா! உரிய நீர் கிடைக்குமா? இன்று காவிரி ஒழுங்காற்றுக்குழு கூடுகிறது
டெல்லி: காவிரியிலிருந்து குறிப்பிட்ட அளவு நீரை தமிழகத்திற்கு கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்திருந்தது. ஆனால் தற்போது வரை நிர்ணயிக்கப்பட்ட அளவு நீர் வரவில்லை. இந்நிலையில் இன்று ஒழுங்காற்றுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
காவிரி நீரை பெறுவதற்கு தமிழ்நாடு தொடர்ந்து கர்நாடக மாநிலத்திடம் போராடி வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் விநாடிக்கு 25,000 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு வலியுறுத்தியிருந்தது. இதனை கர்நாடகா ஏற்கவில்லை. எனவே உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு நாடியது. அதேபோல கர்நாடக அரசும் நீதிமன்றத்தை நாட காவிரி மேலாண்மை ஆணையம் இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆணையமானது, விநாடிக்கு 5,000 கனஅடி நீரை திறக்க கர்நாடகாவுக்கு கூறியது. ஆனால் கர்நாடக இதை ஏற்கவில்லை. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான மழை இல்லாததாலும், ஒட்டுமொத்தமாக பருவமழை குறைந்ததாலும் நீர் வரத்து குறைவாக இருக்கிறது என்று கூறி இந்த நீரை திறக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றமானது, காவிரி மேலாண்மை ஆணையம் வழிகாட்டிய அளவுக்கு தண்ணீரை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது கர்நாடகாவில் பெரும் சலசலப்புகளை உருவாக்கியுள்ளது.
மண்டியா, சாம்ராஜ் நகர், மைசூர், பெங்களூர் உள்ளிட்ட என மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் கன்னட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூர் பந்த், கர்நாடகா பந்த் என தொடர்ச்சியாக போராட்டத்தை கன்னட அமைப்புகள் நடத்தின. கர்நாடக அரசின் நடவடிக்கையால் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கடுமையான சரிவை சந்தித்தது. வடகிடக்கு பருவமழை ஓரளவு கைகொடுத்ததால் டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரம் ஓரளவு பிரசன்னையில்லாமல் சென்றுக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கடந்த மாதம் நடைபெற்ற ஒழுங்காற்றுக்குழு கூட்டத்தில், விநாடிக்கு 3,128 கனஅடி நீர் திறக்க வேண்டும் என்று குழு உத்தரவிட்டிருந்தது. அதேபோல, ஜனவரி மாதம் முதல் நாளில் இருந்து விநாடிக்கு 1,003 கனஅடி நீர் திறக்குமாறும் கூறியிருந்தது. இப்படி இருக்கையில் இன்று குழுவின் கூட்டம் நடைபெறுகிறது. இதில், தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலிருந்து அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.












Click it and Unblock the Notifications