மக்களே “ரிலாக்ஸ்”.. நிர்பந்திக்கும் அதிகாரிகள்! அதெல்லாம் கட்டாயமில்ல - மத்திய அமைச்சரே சொல்லிட்டாரு
டெல்லி: ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணிகள் நாடு முழுவதும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இரண்டு ஆவணங்களையும் இணைப்பது கட்டாயம் இல்லை என்றும், மக்கள் விரும்பினால் அதை செய்யலாம் எனவும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து உள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இணைந்து ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் திட்டத்தை தொடங்கின. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் அப்போதே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பை நிறுத்துமாறு இடைக்கால உத்தரவை பிறப்பித்தது.

தேர்தல் சீர்திருத்த சட்டதிருத்தம்
இந்த நிலையில் ஓராண்டுக்கு முன் நாடாளுமன்ற இரு அவைகளிலும் தேர்தல் சீர்திருத்த சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து சட்டமானது. ஆனால், இந்த மசோதாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக, விசிக, காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன.

இணைப்பு பணி
அதன் தொடர்ச்சியாக தற்போது நாடு முழுவதும் ஆதார் அட்டையுடன் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டிலும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர்களின் தலைமையில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்றும், சிறப்பு முகாம்களை அமைத்தும் துரிதமாக ஆதார் - வாக்காளர் அட்டை இணைக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

மக்கள் எதிர்ப்பு
இந்த இணைப்புக்கு பல பகுதிகளில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த பகுதிகளில் கருத்துக் கேட்பு மற்றும் விளக்க கூட்டங்களை நடத்தி வருகின்றனர். அதிகாரிகள் மக்களை கட்டாயப்படுத்தி இந்த இணைப்பு பணிகளை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. வாக்குரிமை பறிக்கப்படும் என்பன போன்ற பல்வேறு அச்சங்களையும் மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அமைச்சர் கிரண் ரிஜிஜு
இந்த நிலையில் ஆதார் வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தின் லோக் சபாவில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம் அளித்து உள்ளார். இந்த இணைப்பு பணி கட்டாயம் இல்லை என்றும், மக்கள் தேவைப்பட்டால் முன்வந்து இணைக்கலாம் எனவும் தெரிவித்து உள்ளார்.

திரும்பப்பெற முடியாது
"மக்களின் ஒப்புதலுடனே இந்த இணைப்பை மேற்கொள்ள வேண்டும். இந்த இணைப்பை திரும்பப்பெறுவதற்கு எந்த வழியும் இல்லை. தேர்தல் ஆணையம், ஆதார் ஆணையத்தின் வழிமுறைகளை பின்பற்றுகிறது. ஆதார் எண்ணை உரிய நபரை அங்கீகரிக்கவுமே பயன்படுத்துகிறது. அதே நேரம் ஆதாரிடம் இருந்து எந்த தனிப்பட்ட தகலையும் தேர்தல் ஆணையம் பெறாது." என்றார்.

இணைப்பை எதிர்த்து வழக்கு
இந்த சட்டத்திருத்தை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான எஸ்.ஜி.ஓம்பத்கரே இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். ஆதார் - வாக்காளர் அட்டை இணைப்பை கட்டாயப்படுத்தக்கூடாது என அவர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சியாம் திவான் தெரிவித்தார்.

மத்திய அரசுக்கு நோட்டீஸ்
இதனை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.கே.கவுல் தலைமையிலான அமர்வு, மத்திய அரசும் தேர்தல் ஆணையமும் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு உத்தரவு பிறப்பித்தது. அதோடு ஆதார் சட்டத்திருத்தத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுவுடன் இந்த வழக்கை இணைக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications