12ம் வகுப்பு சிறுமி மீது.. பைக்கில் வந்து ஆசிட் வீசிய "சிறுவர்கள்".. டெல்லியில் பட்டப்பகலில் கொடுமை!
டெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் 17 வயது சிறுமி மீது சிறுவன் ஒருவன் ஆசிட் வீசியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் துவாரகா பகுதியில் இன்று காலை சுமார் 7 மணியளவில் பள்ளி செல்வதற்காக 12ம் வகுப்பு பயிலும் சிறுமி ஒருவர் தனது சகோதரியுடன் பேருந்து நிலையத்தில் காத்திருந்திருக்கிறார்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இரண்டு சிறார்கள் பைக்கில் அப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளனர். இதனையடுத்து திடீரென அந்த சிறுவர்கள் மாணவி மீது ஆசிடை வீசியுள்ளனர்.

கேள்வி
ஆசிட் பட்டு கதறிய சிறுமியை மீட்டு முதலுதவி செய்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறைனருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சிறுமி டெல்லியின் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இந்த குற்றத்தில் இரண்டு சிறுவர்கள் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். பட்டப்பகலில் சிறுமி மீது ஆசிட் ஊற்றியுள்ள சம்பவம் டெல்லி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து எதிர்க்கட்சியினர் ஆளும் ஆம் ஆத்மி கட்சி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அதேபோல காவல்துறையினரின் நடவடிக்கையையும் கேள்வியெழுப்பியுள்ளனர்.

சிசிடிவி காட்சி
சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரியும் உடன் இருந்த நிலையில் அவரிடம் விசாரித்ததில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அவரது சகோதரிக்கு நன்கு பரிட்சியமான இருவர்தான் இந்த குற்றத்தில் ஈடுபட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த இரண்டு பேரில் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரும் 17 வயது சிறுவன் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர். மற்றொருவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அதிகரித்த குற்றங்கள்
சமீபத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றுள்ள நிலையில் ஆம் ஆத்மி ஆட்சியின் கீழ் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விமர்சித்துள்ளன. ஆனால் டெல்லியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறைதான் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதால் மத்திய அரசு மீது ஆம் ஆத்மியினர் குற்றம்சாட்டியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலகட்டங்களில் மற்ற அனைத்து குற்றங்களும் குறைந்து இருந்த நிலையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் மட்டும் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறியுள்ளன. குறிப்பாக 2018ம் ஆண்டு நாடு முழுவதும் 228 பெண்கள் மீது ஆசிட் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. 2019ம் ஆண்டு கொரோனா தொற்று பரவியதால் நாடு முழுவதும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.

காரணம்
இந்நிலையில் இந்த ஆண்டு ஆசிட் தாக்குதல் எண்ணிக்கை 249 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து 2020ம் ஆண்டு 182 ஆசிட் வீச்சு சம்பவங்களும், 2021ம் 176 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. பெரும்பாலும் காதல் விவகாரங்களில் பெண்களை பழிவாங்க இது போன்று ஆசிட் வீச்சு சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இன்று டெல்லியில் நடைபெற்ற ஆசிட் வீச்சு சம்பவத்திற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என காவல்துறையினர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications