எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் பேச்சு சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது.. உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் அடிக்கடி சர்ச்சைகளை கிளப்பும் வகையில் பேசும் நிலையில் அவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு விசாரித்த நிலையில் 4 நீதிபதிகள் ஒன்றாகவும், நீதிபதி பிவி நாகரத்னா தனிப்பட்ட தீர்ப்பையும் வழங்கினார்.
இந்தியாவில் சமீப காலமாக அமைச்சர்கள், பொதுப்பதவியில் இருப்பவர்கள் பிறரை இழிவுப்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது ஆங்காங்கே நடந்து வருகிறது.
சாதாரண மக்கள் கூறும் கருத்துகளை காட்டிலும் எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுப்பதவியில் இருப்பவர்கள் தெரிவிக்கும் கருத்துகள் என்பது பதற்றத்தை உருவாக்கும் சூழலை ஏற்படுத்துகிறது.

உத்தர பிரதேச அமைச்சர் சர்ச்சை
இந்நிலையில் தான் இதனை தடுக்க வேண்டும் எனக்கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதாவது கடந்த 2016ம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் அருகே தாய், மகளை ஒரு கும்பல் பலாத்காரம் செய்தது. இந்த வழக்கை விவாதத்தை ஏற்படுத்தியது. இதுபற்றி உத்தர பிரதசத்தில் அமைச்சராக இருந்த அசம்கான் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். இந்த வழக்கின் பின்னணியில் சதி உள்ளதாக அவர் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இந்நிலையில் வழக்கை டெல்லிக்கு மாற்றக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேலும் அசம்கான் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரியும், பொதுப்பதவியில் இருப்பவர்கள் பிறரை இழிவுப்படுத்தும் வகையில் பேசுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அரசியல் சாசன அமர்வில் விசாரணை
இதுதொடர்பான வழக்கை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது. நீதிபதிகள் எஸ் அப்துல் நசீர், ஏஎஸ் போபண்ணா, பிஆர் கவாய், வி ராமசுப்ரமணியன், பிவி நாகரத்னா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து இன்று உத்தரவு பிறப்பித்தது.

கூடுதல் கட்டுப்பாடுகள் உண்டா?
அப்போது நீதிபதிகள் எஸ் அப்துல் நசீர், ஏஎஸ் போபண்ணா, பிஆர் கவாய், வி ராமசுப்ரமணியன் ஆகியோர் ஒரேமாதிரியான தீர்ப்பை வழங்கினர். அதன்படி ‛‛எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் என அனைவருக்கும் இந்திய அரசிலமைப்பின் 19(1)(ஏ) என்ற பிரிவின் கீழ் அனைத்து மக்களுக்கும் இருக்கும் பேச்சுரிமை பொருந்தும். அவர்களும் சாதாரண மக்களை போல் பேச்சு சுதந்திரத்தை பெற்றுள்ளனர். இதனால் எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்கள் உள்ளிட்ட பொதுப்பதவியில் இருப்பவர்களுக்கு பேச்சு சுதந்தரித்தின் அடிப்படை உரிமைக்கு எதிராக கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க முடியாது. மேலும் அமைச்சருக்கும், அரசுக்கு உள்ள கூட்டு பொறுப்பை காரணம் காட்டி அமைச்சர் ஒருவர் தெரிவிக்கும் கருத்தை அரசின் கருத்தாக எடுத்து கொள்ள முடியாது'' என உத்தரவிட்டனர்.

பிவி நாகரத்னா தனித்தீர்ப்பு
மேலும் இந்த அமர்வில் நீதிபதி பிவி நாகரத்னா தனித்தீர்ப்பை வழங்கினார். அவர், ‛‛பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் என்பது தேவையான உரிமை தான். இதனை அறிந்து செயல்பட வேண்டும். மக்கள் அனைவரும் ஆட்சியை, பற்றி நன்கு நன்கு அறிந்தவர்களாகவும், கல்வி கற்றவர்களாகவும் இருந்தால் ஒவ்வொருவரின் கருத்தும் வெறுப்பூட்டும் பேச்சாக எடுத்து கொள்ளப்படாது. ஒருவரின் சர்ச்சைக்குரிய கருத்து என்பது அடிப்படை கட்டமைப்பை தாக்குகிறது. மேலும் வெவ்வேறு பின்னணி கொண்ட குடிமக்களையும் தாக்குகிறது. நம் நாட்டை பொறுத்தமட்டில் சாதி, மாதம், பெண்களின் கண்ணியத்தை தாக்குகிறது. இது தவிர்க்கப்பட வேண்டும்'' என மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். மேலும் பொதுப்பதவியில் இருப்பவர்கள் சுயக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். அவதூறான கருத்துக்களை வெளியிடக்கூடாது என்பது எழுதப்படாத விதிகளாக உள்ளது. இதனை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என நீதிபதி பிவி நாகரத்னா கூறினார்.












Click it and Unblock the Notifications