காங்கிரஸ் தலைவராகிறாரா பிரியங்கா காந்தி? - ஐந்து மாநில தேர்தலுக்குப் பின் சர்ப்ரைஸ்!
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் அகில் இந்திய தலைவராக பிரியங்கா காந்தி தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி இருக்கிறார். அவருக்கு அடுத்து, காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை விரைவில் தேர்ந்தெடுக்கவுள்ளார்கள்.
2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. இதையடுத்து, காங்கிரஸ் தலைவராக இருந்த ராகுல் காந்தி கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

ராகுல் காந்தி
சோனியா காந்திக்குப் பிறகு, ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வானார். ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் என்று பார்க்காமல் அவரை பப்பு என்றே அழைத்து தேர்தலை சந்தித்தது பாஜக. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தி இரண்டு இடங்களில் போட்டியிட்டார். உத்தரப்பிரதேசத்தில் தோல்வியைத் தழுவி, கேரளத்தில் வென்றார்.

ராஜினாமா
இதையடுத்து, கட்சி தலைவர் பதவியில் இருந்து ராகுல்காந்தி விலகினார். மூத்த தலைவர்கள் சமரசம் செய்தும் அதை ராகுல்காந்தி ஏற்கவில்லை. இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். தலைவர் பதவியை ஏற்க ராகுல்காந்தியை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனாலும் ராகுல் காந்தி அதை ஏற்கவில்லை.

பிரியங்கா காந்தி
2019ம் ஆண்டு பிரியங்கா காந்திக்கு அகில இந்திய பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதோடு, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பொறுப்பாளராகவும் பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்டார். அப்போது முதல் பிரியங்கா காந்தி காங்கிரஸ் சார்பாக அனைத்து பிரசாரங்களையும் முன்னெடுத்து நடத்தி வருகிறார். பாஜகவுக்கு எதிராக எந்த விஷயம் வந்தாலும், டிவிட்டர் வாதம் தொடங்கி களத்திலும் போராட்டம் செய்கிறார்.

தலைவர்
தற்போது பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் பிரியங்கா காந்தி அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். உத்தரப்பிரதேசத்தில் வீடு வீடாக சென்று பிரசாரம் செய்கிறார். அவருக்காக அதிக அளவில் கூட்டம் கூடுவதாகவும் உத்தரப்பிரதேச அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பொறுப்புத் தலைவர் சோனியா காந்திக்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதால், அவருக்கு அடுத்து தலைவரை நியமிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலுக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சியின் காரியகமிட்டி கூட்டம் நடைபெறவுள்ளது. அப்போது பிரியங்கா காந்தி புதிய தலைவரக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications