இந்திய ராணுவம்தான் உலகிலேயே 'பெஸ்ட்'.. காரணம் அக்னிபாத்.. அடித்து சொல்லும் அமைச்சர் ராஜ்நாத் சிங்
டெல்லி: உலகிலேயே சிறந்த ராணுவமாக இந்திய ராணுவம் மாறியதற்கு அக்னிபாத் திட்டம்தான் முக்கிய காரணம் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
மேலும், இளம் ரத்தத்தை பாய்ச்சி உள்ளதால் எந்த மாதிரியான சவால்ளையும் சந்திக்கும் வல்லமையை இந்திய ராணுவம் பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசு கொண்டு வந்த அக்னிபாத் திட்டத்தில் சேர இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் குறைவதாக ஒருபுறம் செய்தி வந்துகொண்டிருக்கும் நிலையில், ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
அக்னிபாத்தும்.. போராட்டங்களும்..
இந்திய ராணுவத்தில் தற்காலிகமாக பணியாற்ற வழிவகை செய்யும் அக்னிபாத் எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி அனுப்பப்படுவார்கள். இவர்களுக்கு மற்ற ராணுவத்தினருக்கு வழங்கப்படுவதை போன்ற ஓய்வூதியமோ, பணிக்கொடையோ வழங்கப்படாது. அவர்கள் ராணுவத்தில் இருந்து வெளியேறும் போது ரூ.11 லட்சம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன. ராணுவத்தில் முழு நேரமாக பணியாற்ற காத்திருந்த இளைஞர்கள், இந்த திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல இடங்களில் வன்முறைகளும், பொது சொத்துகளை சேதப்படுத்தும் சம்பவங்களும் அரங்கேறின.
குறைந்து போன வரவேற்பு
இருந்தபோதிலும், இந்த அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு விடாப்பிடியாக செயல்படுத்தியது. முதலில், இந்தத் திட்டத்தின் கீழ் இளைஞர்கள் அதிக அளவில் சேர முன்வந்தனர். ஆனால், நாட்கள் செல்ல செல்ல, இந்த திட்டத்துக்கு இளைஞர் மத்தியில் வரவேற்பு குறைந்தது. குறிப்பாக, கடந்த மாதம் உத்தரபிரதேசத்தில் பல இடங்களில் நடந்த அக்னிபாத் தேர்வுகளில் மிக மிக குறைவாக இளைஞர்கள் பங்கேற்றனர். சில இடங்களில் ஒருவர் கூட இந்தத் தேர்வில் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளிவந்தன.
புகழ்ந்த ராஜ்நாத் சிங்
இந்நிலையில், அக்னிபாத் வீரர்கள் பணியில் இருக்கும் போதே படிப்பை தொடர வழிவகை செய்யும் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் காணொலி வாயிலாக பங்கேற்று ராஜ்நாத் சிங் பேசியதாவது: இந்திய ராணுவத்தின் வலிமை அக்னிபாத் வீரர்கள் பல மடங்கு அதிகரித்துள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் இப்போது வரை 26,000 அக்னிவீரர்கள் ராணுவத்தில் இணைந்துள்ளனர். மேலும், 20,000 வீரர்கள் ராணுவத்தில் இணைய தயாராக இருக்கிறார்கள்.
உலகிலேயே 'பெஸ்ட்'
இந்த அக்னிவீரர்களின் வரவால் இந்திய ராணுவத்திற்கு புதிய இளம் ரத்தம் பாய்ச்சப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, உலகிலேயே சிறந்த ராணுவங்களில் ஒன்றாக இந்திய ராணுவத்தை பெற்றிருக்கிறது. இப்போது மட்டுமல்ல இனி எதிர்காலத்திலும் எத்தகைய சவால்களையும் சந்திக்ககூடிய வல்லமையை அக்னிவீரர்களால் இந்திய ராணுவம் பெற்றிருக்கிறது. இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.