விமானத்தில் அசாதாரண சூழல் இருந்தது.. விபத்துக்கு 2 மணி நேரம் முன் பயணித்த பயணி பகிர்ந்த வீடியோ
சென்னை: அகமதாபாத் விமான விபத்து சம்பவம் பேரதிர்வை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த விமானத்தில் 2 மணி நேரத்துக்கு முன்பு பயணித்த பயணி ஒருவர், இந்த விமானத்தில் வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில் நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை. இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்திலும் பகிர்ந்தேன் என்று கூறியுள்ளார்.
விபத்துக்குள்ளான விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்த பயணி ஆகாஷ் வத்ஷா என்பவர் தான் இந்த குற்றச்சாட்டை வைத்து இருந்தார். டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்து பின்னர் அந்த விமானம் லண்டன் புறப்பட்டது. அப்போது தான் விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

தீப்பிடித்து எரிந்த விமானம்
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து இங்கிலாந்தின் லண்டனுக்கு ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இன்று பிறபகல் புறப்பட்டது. இந்த விமானம் ஓடுபாதையில் இருந்து சரியாக 1.38 மணிக்கு புறப்பட்டு இருக்கிறது. டேக் ஆஃப் ஆகி சில நிமிடங்களிலேயே இந்த விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.
கீழே விழுந்ததும் வெடித்து சிதறியது. தீப்பிடித்து எரிந்ததில் விமானத்தில் பயணித்த பயணிகள் தீயில் கருகினர். அகமதாபாத் அருகே உள்ள பெஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தில் இந்த விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதால், அங்கு விடுதியில் இருந்தவர்களும் காயமடைந்துள்ளனர். தீயில் கருகி பலியானவர்கள் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்தவர்களும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரே ஒருவர் உயிர் பிழைத்தார்
இதில், 242 பேர் பயணம் செய்த நிலையில் அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. குஜராத் மாநில சுகாதாரத்துறை செயலாளர் இந்த தகவலை கூறியிருந்தார். இதேபோன்று மீட்கப்பட்ட உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க டி.என்.ஏ பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஒரே ஒருவர் இந்த விமான விபத்தில் உயிர் பிழைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏசி கூட இயங்கவில்லை
இதற்கிடையே ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளாவதற்கு இரண்டு மணி நேரம் முன் தான் அந்த விமானத்தில், "நான் பயணம் செய்தேன். வழக்கத்திற்கு மாறான சூழலை உணர்ந்தேன். தொழில் நுட்ப வசதிகள் எதுவும் சரியாக இயங்கவில்லை. இதனை ஏர் இந்தியாவை டேக் செய்து எக்ஸ் தளத்திலும் பகிர்ந்தேன் என்று விபத்துக்குள்ளான விமானத்தில் டெல்லியில் இருந்து அகமதாபாத் வந்த பயணி ஆகாஷ் வத்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
விமானத்தில் உள்ள சிறிய திரையும் இயங்கவில்லை என்பதை வீடியோவாக பதிவு செய்து உள்ளார் ஆகாஷ் வத்சா. ஏசியும் சரியாக இயங்கவில்லை. விளக்குகள் கூட சரியாக எரியவில்லை. இதுதான் மிகவும் மோசமான ஏர்லைன்ஸ் என்றும் விமர்சித்து அவர் பதிவிட்டு இருந்தார்.












Click it and Unblock the Notifications