லண்டன் வேலையை ராஜினாமா செய்ய சென்ற நர்ஸ் ரஞ்சிதா.. அகமதாபாத்தில் இறுதி நாள்.. உருக்கமான தகவல்
அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் ஒன்று லண்டனுக்கு நேற்று மதியம் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். இந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் ஒருவரை தவிர அனைவரும் இன்று உயிருடன் இல்லை.. லண்டனில் நர்சாக பணியாற்றிய கேரளாவைச் சேர்ந்த ரஞ்சிதா நாயர் ராஜினாமா செய்ய சென்ற போது பலியாகி உள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், இந்தியாவின் 7-வது முக்கியமான விமான நிலையமாகும். அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து தினமும் பல்வேறு நாடுகளுக்கும், இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது.

விமானம் புறப்பட்டது
இந்நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான டிரீம்லைனர் விமானம் ஒன்று லண்டனுக்கு நேற்று மதியம், 23-வது ஓடுபாதையில் இருந்து புறப்பட்டது. விமானத்தில் 230 பயணிகள், 10 பணியாளர்கள் மற்றும் 2 விமானிகள் என மொத்தம் 242 பேர் இருந்தனர். புறப்படுவதற்கு தேவையான அனைத்து நடைமுறைகளுக்கு பின்னர் சரியாக 1.39 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட்டது.
மே டே அழைப்பு
விமானத்தை சபீர் சபர்வால் என்ற விமானி ஓட்டினார். அவருக்கு துணையாக கிளைவ் குந்த் என்ற துணை விமானியும் பணியில் இருந்தார். அந்த விமானம் வானில் பறந்த சில நிமிடங்களில், 825 அடி உயரத்தில் பறந்தது. அப்போது அதற்கு மேல் விமானம் பறக்க முடியாமல் சட்டென கீழ்நோக்கி வந்தது.. விமானியிடம் இருந்து கட்டுப்பாட்டு அறைக்கு 'மே டே அழைப்பு' எனப்படும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் சூழ்நிலையிலான அவசர அழைப்பு வந்தது.
வெடித்து சிதறியது
அதை ஏற்று கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், மீண்டும் விமானியை தொடர்பு கொள்ள முயன்றனர். ஆனால் அதற்குள் விமானத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட அடுத்த ஒரு சில நிமிடத்தில், விமான நிலையம் அருகே உள்ள மெகானி என்ற இடத்தில் விமானம் கட்டுப்பாட்டை இழந்து, அருகில் இருந்த பி.ஜே. தனியார் மருத்துவக் கல்லூரியின் விடுதிக்கட்டிடத்தில் மோதி வெடித்து சிதறியது. அதில் இருந்து எழுந்த தீப்பிழம்புகளும், கரும்புகையும் மொத்த அஹமதாபாத்தும் பார்க்கும் வகையில் தெரிந்தது.
உயிர் தப்பிய ஒரே பயணி
இதைப்பார்த்த விமானநிலைய ஊழியர்கள், விமான போக்குவரத்து அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த விபத்தில் பயணிகள் உள்பட 241 பேர் உடல் கருகி பிணமாக கிடந்தனர். அவர்களில் பலரது உடல்கள் அடையாளம் காணமுடியாமல் இருந்தது. விமானத்தில் பயணித்த குஜராத் மாநில முன்னாள் முதல்வரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான விஜய் ரூபானியும் உயிரிழந்தார்.
அதேநேரம் விமானத்தில் ஒரே ஒரு பயணி மட்டும் உயிர் பிழைத்தார். அதேநேரம் விமானத்தில் 11 ஏ என்ற சீட்டில் பயணித்த விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற பயணி அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். அவர் விமானம் வெடித்து சிதறுவதற்கு ஒரு நிமிடம் முன்பு சரியாக எமர்ஜென்சி ஜன்னல் வழியாக குதித்து உயிர் தப்பினார்.
போக்குவரத்து நெரிசலால் தப்பிய பெண் பயணி
இதேபோல் போக்குவரத்து நெரிசலால் விமானத்தை தவறவிட்டதால் ஒரு பெண் உயிர்தப்பியுள்ளார். அகமதாபாத்தில் விபத்தில் சிக்கிய லண்டன் விமானத்தில் பூமி சவுகான் என்ற பெண் பயணம் செய்ய டிக்கெட் எடுத்திருக்கிறார். ஆனால் அவர் வாகனத்தில் தனது வீட்டில் இருந்து சர்தார்வல்லபாய் படேல் விமான நிலையம் நோக்கி புறப்பட்டார். ஆனால் வழியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதன் காரணமாக விமான நிலையத்துக்கு 10 நிமிடங்கள் தாமதமாக சென்றார். இதனால் அவர் விமானத்தில் ஏறமுடியவில்லை.. இதனால் உயிர் தப்பினார்.
கேரள நர்சு பயணம்
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்த 39 வயதாகும் ரஞ்சிதா நாயர் ர் ஓமனில் 9 ஆண்டுகள் நர்சாக பணி செய்து வந்தார். பின்னர் கடந்த ஓராண்டுக்கு முன்பு லண்டனில் நர்சாக பணியில் சேர்ந்தார். இந்தநிலையில் ரஞ்சிதாவுக்கு கேரள அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் கோழஞ்சேரி அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்தது.
லண்டன் வேலை
இதற்காக கேரளா வந்த அவர் லண்டனில் பணியாற்றிய மருத்துவமனைக்கு சென்று ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவு செய்தார். இதற்காக அவர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அரசு மருத்துவமனையில் வேலை கிடைத்த நிலையில் விமான விபத்தில் கேரள நர்சு பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்த கேரள நர்சுக்கு ரஞ்சிதாவுக்கு 15 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.












Click it and Unblock the Notifications