அதிமுக பொதுக்குழு வழக்கு.. பவர் இருக்கு.. எடப்பாடி பரபர வாதம்.. விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு!
சென்னை: அதிமுக பொதுக் குழு செல்லும் என்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவின் விசாரணை மீண்டும் தொடங்கிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வாதங்களை வைத்தது. இதையடுத்து விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக் குழு செல்லும் என உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் உள்ளிட்டோர் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் சாய் ஆகியோர் அமர்வு முன்பு கடந்த 5 ஆம் தேதி நடந்தது. அப்போது அதிமுகவின் விதிப்படி 5இல் 1 பங்கு உறுப்பினர்களின் கோரிக்கை அடிப்படையில் பொதுக் குழு நடந்ததாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது.
பொதுக்குழு உறுப்பினர்களை நியமித்த ஓபிஎஸ்.. 2 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள்.. ஷாக்கில் ஈபிஎஸ்!
இடைக்கால பொதுச் செயலாளர்
இதன் பின்னர் இடைக்கால பொதுச் செயலாளர் என்பவர் தேர்தல் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டாரா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பெரும்பான்மை பொதுக் குழு உறுப்பினர்களால் இடைக்கால பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட்டார் என எடப்பாடி தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இரு பதவிகள்
அதற்கு இரு பதவிகளுக்கும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக ஓபிஎஸ் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூலை 11 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே அதிமுகவில் தொடர உத்தரவிடுமாறு ஓபிஎஸ் தரப்பு கோரியது. அதற்கு எந்த விளக்கமும் கேட்காமல் ஓபிஎஸ்ஸை அதிமுகவிலிருந்து நீக்கியது ஏன் என எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் நீதிபதிகள் கேள்வி கேட்டனர்.
திமுகவுக்கு ஆதரவாக செயல்படும் ஓபிஎஸ்
அதற்கு எடப்பாடி தரப்பு கூறுகையில் ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என குற்றம்சாட்டினார். இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் கூறுகையில் பொதுச் செயலாளருக்கான அனைத்து அதிகாரங்களும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு மாற்றப்பட்டது எப்படி என்பது குறித்து விதிமுறைகளை வழக்கறிஞர், நீதிபதிகளுக்கு படித்துக் காட்டினார்.
பொதுச் செயலாளர்
அப்போது நீதிபதிகள் பொதுச் செயலாளர் பொறுப்பை மாற்றி இரட்டை தலைமையை உருவாக்கியது பொதுக் குழுவா என கேட்டனர். அதற்கு ஓபிஎஸ் ஆம் என பதில் அளித்தார். மேலும் கழகம் என்றால் என்ன, ஓபிஎஸ்- இபிஎஸ் என்றால் என்ன, உள்ளிட்ட கேள்விகளையும் நீதிபதிகள் முன் வைத்தனர். இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு மீண்டும் வந்தது. அப்போது ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த வைரமுத்து தன் தரப்பு வாதத்தை முன் வைத்தார்.
அவைத் தலைவர்
அப்போது நீதிபதிகள் அவைத்தலைவர் என்றால் என்ன என கேள்வி எழுப்பினர். அதற்கு வைரமுத்து பதில் அளிக்கையில் அதிமுக செயற்குழு , பொதுக் குழுவை தலைமையேற்று நடத்தும் அதிகாரம் கொண்டவர்தான் அவைத்தலைவர் என்றார். மேலும் வைரமுத்து தரப்பு கூறுகையில் பொதுச் செயலாளருக்கு இருக்கும் அதிகாரங்கள் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கப்பட்டது.
2017 பொதுச் செயலாளர்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நிரந்தர பொதுச் செயலாளராக அறிவிக்கப்பட்டார். 2017 க்கு முன் பொதுச் செயலாளருக்கு இருந்த அதிகாரங்கள், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி என்பது 5 ஆண்டு காலமாகும். அதிமுகவுக்கு தேவைப்படும் அவசர நடவடிக்கைகளை எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியில் ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்க ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது. பொருளாளரை நியமிக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விதிகளில் திருத்தம்
பொதுச் செயலாளராக போட்டியிடுவதற்கான திருத்த விதிகளில் எடப்பாடி பழனிசாமி மட்டுமே போட்டியிடும் வகையில் விதிகளில் திருத்தம் உள்ளது. எடப்பாடி தான் பொதுச் செயலாளர் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில் ஒருங்கிணைப்பாளரின் சம்மதம் இல்லாமல் இந்த கூட்டத்தை கூட்டியதும் அந்த பொதுக் குழுவில் ஓபிஎஸ்ஸை நீக்கியதும் தவறாகும் என வைரமுத்து தரப்பு வாதம் செய்தது. இந்த நிலையில் தனி நீதிமன்ற நீதிபதி அளித்த தீர்ப்பில் மேற்படி என்ற வார்த்தையை பயன்படுத்தியிருந்தார். அதற்கான அர்த்தம் குறித்து நீதிபதிகள் கேட்டறிந்தனர். உணவு இடைவேளையின்றி தொடர்ந்து வாதத்தை கேட்ட நீதிபதிகள் அதன் பிறகு இந்த விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களையும் அவசரமின்றி எடுத்து வைக்கலாம் என கூறி வழக்கு விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
விசாரணை தொடங்கியது
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஒன்றரை கோடி தொண்டர்கள்தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்யமுடியும் என ஓபிஎஸ் தரப்பு கூறுகிறார்களே என கேள்வி எழுப்பி அதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்போ எல்லா விஷயங்களுக்கு தொண்டர்களிடம் செல்வது என்பது சிரமமான காரியம். தொண்டர்களால் விதிகள் மாற்றப்படவில்லை. 2017 ஆம் ஆண்டு அதிமுக விதிகளில் பொதுக் குழு உறுப்பினர்களால் விதிகள் மாற்றப்பட்டன. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என இரு பதவிகளை உருவாக்கும் அதிகாரம் பொதுக்குழுவுக்கு இருக்கும் போது அந்த பதவிகளை நீக்கும் அதிகாரமும் உண்டு. அதிமுக அடிப்படை உறுப்பினர்களின் முகமாகத்தான் பொதுக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் என பதில் அளித்தனர். இன்று எடப்பாடி தரப்பு வாதம் முடிந்த நிலையில், வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.