மேகதாது அணை, ரபேல் விவகாரம்... எம்.பி.க்கள் போராட்டம், அமளி.. நாடாளுமன்றம் ஒத்திவைப்பு
டெல்லி: மேகதாது, ரபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
பரபரப்பான சூழ்நிலையில் காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடியது. அப்போது நாடாளுமன்ற இரு அவைகளிலும் அதிமுக உறுப்பினர்கள் மேகதாது விவகாரத்தை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை அருகே அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதே போல், மக்களவையில் ரஃபேல் விவகாரம் மற்றும் சீக்கிய கலவரம் குறித்து கேள்வி எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டது.
மேலும், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க கோரி, தெலுங்கு தேச கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நரமல்லி சிவபிரசாத் நாட்டுபுற பாடகர் போல் வேடமணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதற்கு முன்னதாக, மாணவன், மந்திரவாதி, கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு வேடங்களை அணிந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் அமளி காரணமாக இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. தொடர்ந்து நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் ஒத்திவைக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications