ஓயாத அதிமுக அக்கப்போர்- டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ். சந்திப்பு
டெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் (ஓ.பி.எஸ்), இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி (ஈ.பி.எஸ்) சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில் அதிமுக உட்கட்சி பிரச்சனை, சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
சட்டசபை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்த பா.ஜ.க. 4 இடங்களில் வென்றது. 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தமிழக சட்டசபைக்குள் மீண்டும் பா.ஜ.க. நுழைந்துள்ளது.
அதேநேரத்தில் புதுச்சேரி தேர்தலில் அதிமுக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் போனது. புதுச்சேரியில் பா.ஜ.க. 6 இடங்களில் வென்று அதிமுகவின் இடத்தைப் பிடித்தது.
பரபரக்கும் அரசியல் களம்..சசிகலா பற்றிய நிருபர்கள் கேள்வி..
ஓங்கிய ஈ.பி.எஸ். கை
சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் யாருக்கு செல்வாக்கு என்பதில் பிரச்சனை வெடித்தது. இதில் ஈ.பி.எஸ்-க்கு அதிக எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருந்ததால் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரானார். வேறுவழியே இல்லாமல் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்றார் ஓபிஎஸ். அதிமுகவில் ஓ.பி.எஸ். நம்பர் 2 என்ற நிலைதான் ஏற்பட்டது.
சசிகலா குடைச்சல்
இன்னொரு பக்கம் அதிமுக நிர்வாகிகளுடன் சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி அந்த ஆடியோக்களை வெளியிட்டு குடைச்சல் கொடுத்து வருகிறார். தற்போது டிவி பேட்டிகளிலும் அதிமுகவை மீண்டும் கைப்பற்றுவேன் என சூளுரைத்து வருகிறார் சசிகலா.
திமுக அரசு நடவடிக்கை
அதேபோல் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது திமுக அரசு நடவடிக்கை எடுக்க தொடங்கி உள்ளது. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அடுத்தடுத்து மாஜி அமைச்சர்கள் மீது நடவடிக்கை பாயும் எனவும் கூறப்படுகிறது.
மோடியுடன் சந்திப்பு
இந்த நிலையில் திடீரென ஓ.பி.எஸ். டெல்லி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் ஈ.பி.எஸ்-ம் டெல்லி சென்று பிரதமர் மோடியை நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின் போது சட்டசபை தேர்தல் தொடர்பாக பேசப்பட்டதாக ஈ.பி.எஸ் கூறியிருந்தார். ஆனால் சசிகலா, அதிமுக உட்கட்சி விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாக டெல்லி தகவல்கள் தெரிவித்தன.
Recommended Video
இன்று அமித்ஷாவுடன் சந்திப்பு
இதனைத் தொடர்ந்து இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ். உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பிலும் அதிமுகவில் நிலவும் யார் பெரியவர் என்கிற பஞ்சாயத்து, சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது உள்ளிட்டவை குறித்தே விவாதிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன டெல்லி தகவல்கள்.