பாடாய்படுத்தும் சிறுநீர் விவகாரம்.. ஏர் இந்தியாவுக்கு மீண்டும் ரூ.10 லட்சம் ஃபைன்.. ஓ இதுக்கு தானா?
டெல்லி: ஏர் இந்தியா விமானத்தில் அடுத்தடுத்து நடந்த சிறுநீர் கழிப்பு சம்பவங்களில் சிக்கி அந்நிறுவனம் திக்குமுக்காடி வருகிறது.
ஏற்கனவே பெண் பயணி மீது போதை ஆசாமி சிறுநீர் கழித்த சம்பவத்தில் ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது மேலும் ஒரு சிறுநீர் கழிப்பு நிகழ்வுக்காக மீண்டும் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் அநாகரீக செயல்கள் குறித்து உடனடியாக புகார் ஏதும் கொடுக்காததால் இந்த அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.
என்னதான் ஆச்சு ஏர் இந்தியாவுக்கு?
ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு இது கஷ்ட காலம் போல தெரிகிறது. தொடர்ந்து பல சர்ச்சைகளிலும், கடும் நடவடிக்கைகளிலும் சிக்கி அந்நிறுவனம் ஒருவழியாகி வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒரு பெண் பயணியின் மீதே சங்கர் மிஸ்ரா என்பவர் போதையில் சிறுநீர் கழித்தார். இந்த விவகாரம் பூதாகரமானதை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
அதிரடி நடவடிக்கை
இதனிடையே, இந்த சம்பவத்தை ஏர் இந்தியா விமான ஊழியர்கள் சரியாகக் கையாளவில்லை எனக் கூறி அந்நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதத்தை டிஜிசிஏ விதித்தது. மேலும், அந்த விமானத்தின் பொறுப்பு விமானியின் உரிமத்தையும் 3 மாதக்காலத்திற்கு சஸ்பெண்ட் செய்தது. டிஜிசிஏவின் இந்த அதிரடி நடவடிக்கையால் கடும் அதிருப்தி அடைந்துள்ள ஏர் இந்தியா நிறுவனம் இன்றுதான் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தது. விமானியின் உரிமம் 3 மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடவடிக்கை அதிகபட்சமானது எனத் தெரிவித்திருந்தது ஏர் இந்தியா.
மேலும் ரூ.10 லட்சம் அபராதம்
இந்நிலையில், ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மேலும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்து டிஜிசிஏ உத்தரவிட்டிருக்கிறது. இதுவும் பயணி சிறுநீர் கழித்ததற்காகத் தான். ஆனால், பெண் பயணி மீது சிறுநீர் கழித்ததற்காக அல்ல. கடந்த டிசம்பர் மாதம் பாரிஸில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் ஒரு ஆண் பயணி, சக பெண் பயணி அமரும் இருக்கையின் மீது சிறுநீர் கழித்துள்ளார்.
தகவல் தெரிவிக்கவில்லை
ஆனால், இந்த சம்பவம் குறித்தும் ஏர் இந்தியா நிறுவனம் டிஜிசிஏ-வுக்கு தெரிவிக்கவில்லை. பெண் பயணி மீது சிறுநீர் கழிக்கப்பட்ட சம்பவம் பூதாகரமாகி, விசாரணை நடந்து வந்த நிலையில்தான், இந்த சம்பவம் குறித்து ஏர் இந்தியா தெரிவித்தது. பயணிகளின் அநாகரீக செயல்கள் குறித்து உடனடியாக டிஜிசிஏ-வுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற விதிமுறையை மீறியதால் ஏர் இந்தியாவுக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.