சீனாவை சின்னாபின்னாமாக்கிய கொரோனா பிஎஃப் 7! மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு! இது ரொம்ப முக்கியம்!
டெல்லி : கொரோனாவில் உருமாறிய புதிய வேரியண்டான கொரோனா பிஎப் 7 காரணமாக சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100 சதவிகித கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஒரு மாதமாக சிறிது சிறிதாக கொரோனா பாதிப்பு உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்து வருகிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது.
சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமிக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பிஎஃப் 7
இதன் காரணமாக சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா சோதனை கட்டாயமாக்கப்படும் என மத்திய அரசு கூறியது,. இதனையடுத்து சென்னை, மதுரை, கோவை, திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட விமான நிலையங்களில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய கொரோனா பாதிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

உச்சகட்ட அச்சம்
தற்போது வரை சீனா, துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் நாட்டில் உச்சகட்ட கண்காணிப்பு நிலவி வரும் நிலையில், தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் தனிமனித இடைவெளி, முகக் கவசம் அணிதல், தடுப்பூசி பூஸ்டர் செலுத்துவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு பயணிகள்
இந்த நிலையில் டிசம்பர் மாதத்தில் 20 நாட்களில் மட்டும் சுமார் 25 கோடி பேருக்கு சீனாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகின. அதே நேரத்தில் அந்நாட்டு அரசு கொரோனா குறித்த விவரங்களை வெளியிடாததால் சீனாவில் தற்போது என்ன நிலைமை நிலவுகிறது என்பது குறித்தும் மற்ற உலக நாடுகள் அச்சம் தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும். இந்தியா கனடா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் செய்யும் வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.

மத்திய அரசு அதிரடி
இந்நிலையில் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்து இருக்கிறது. அதன்படி சீனா, சிங்கப்பூர், ஜப்பான், ஹாங்காங், கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு 100 சதவிகித கொரோனா பரிசோதனை சான்றிதழ் இருக்க வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 72 மணி நேரத்திற்குள்ளாக எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கண்டிப்பாக கொண்டு வர வேண்டுமெனவும், இதனை விமான நிலையங்களில் தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.

ஏர் சுவிதா
இந்தியாவில் கொரோனா பிஎப் 7 பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகளுக்கு ரேண்டம் பரிசோதனை 2 சதவிகிதம் மேற்கொள்ளப்படும் என்பதோடு, அதனை ஏர் சுவிதா இணையதளத்திலும் பதிவேற்றம் செய்ய வேண்டுமெனவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சீனா, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து நேரடியாக இந்தியா வராமல், வேறு நாடுகள் வழியாக வந்தாலும் இந்த நடைமுறையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications