தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பதவி காலம் 5 ஆண்டுகள் நீட்டிப்பு!
டெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பதவி காலம் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த பாஜக ஆட்சியில் நாட்டின் 5-வது தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமனம் செய்யப்பட்டார். பிரமதர் மோடிக்கு அடுத்து அதிகாரம் மிக்கவராக அஜித் தோவல் விளங்கினார்.
மேலும், காஷ்மீரில் உரி மற்றும் புல்வாமாவில் நடந்த தீவிரவாதத் தாக்குதல்களை தொடர்ந்து பாகிஸ்தானுக்குள் இந்திய விமானப்படை நுழைந்து தாக்குதல்களை நடத்தியதற்கும் மூளையாக செயல்பட்டவர்.
இந்திய - சீன இடையிலான தோக்லாம் எல்லைப் பிரச்னையிலும் முக்கிய பங்காற்றியுள்ளாரா். இந்த நிலையில், அண்மையில் நடந்த லோக்சபா தேர்தலில் பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
அஜித் தோவல் மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதனை ஊர்ஜிதப்படுத்தும் விதத்தில், அஜித் தோவலின் பதவி காலம் 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அஜித் தோவலின் அர்ப்பணிப்பு உணர்வு, நாட்டின் பாதுகாப்பிற்காக அவரது பங்களிப்பு உள்ளிட்டவற்றை பாராட்டி இந்த பணி நீட்டிப்பு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், இந்த முறை கேபினட் அமைச்சர் அந்தஸ்துடன் அவர் இந்த பதவியில் தொடர இருக்கிறார்.
கடந்த ஆட்சி காலம் போலவே, இந்தமுறையும் மத்திய அரசில் பிரதமர் மோடிக்கு அடுத்து அதிக அதிகாரம் மிக்கவராக அஜித் தோவல் செயல்படுவார் என்று தெரிகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அஜித் தோவல், மத்திய அரசில் பல்வேறு துறைகளில் திறம்பட செயலாற்றியவர். பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கான தூதராகவும் பணிபுரிந்தவர். உளவுத் துறையிலும் அதிகாரியாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.