குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவந்து சிக்கிக் கொண்ட பாஜக.. அமித்ஷா திடீர் பல்டி
Recommended Video

டெல்லி: வடகிழக்கு மாநிலங்களில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டங்கள் அதிகரித்துள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா திடீரென தனது முடிவிலிருந்து பல்டியடித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளில் வாழும் இந்திய வம்சாவளியினர் தாயகம் திரும்பினால் அவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யக்கூடிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
முஸ்லிம்கள் தவிர்த்த பிற மதத்தினர் இவ்வாறு குடியுரிமை பெற தகுதியானவர்கள் என்று வரையறை செய்யப்பட்டுள்ளது.

நிரந்தர குடியுரிமை
இந்துக்கள், சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் ஆகியவர்கள் இந்தியாவில் 6 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்தால் அதன்பிறகு அவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்த சட்டம் வகை செய்யும். இந்த சட்டம் திருத்தம் லோக்சபாவில் ஜனவரி 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக அரசு முயற்சி செய்து வருகிறது. இந்த நிலையில் அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் இந்த சட்டத்திற்கு எதிராக கடும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அமித்ஷா பல்டி
இந்த நிலையில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் இருந்து மாறி உள்ளதாக தெரிகிறது. முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா இதுபற்றி கூறுகையில், அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.

பேச்சுவார்த்தை
மேலும் அவர் கூறுகையில், பல்வேறு கோரிக்கைகள் வந்த பிறகுதான் மத்திய அரசு இந்த சட்டம் கொண்டு வந்தது. இந்த சட்டம் நாட்டுக்கு மிகவும் அவசியமானது. சில விவகாரங்களில் கட்சிகள் இடையே கருத்துவேற்றுமை உள்ளது. இது தொடர்பாக அனைத்து கட்சிகளுடனும், அதிலும் குறிப்பாக வடகிழக்கு மாநில கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்கள் ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படும் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்

ராஜ்யசபாவில் ஆதரவு இல்லை
அமித்ஷா பேட்டியை வைத்து பார்க்கும்போது, நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது ராஜ்யசபாவில் இந்த சட்டம் தாக்கல் செய்யப்படாது என்று தெரிகிறது. எதிர்ப்புகள் அதிகமாக இருப்பதாலும், ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகள் ஆதரவு இன்றி, இந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடிய அளவுக்கு பாஜகவிற்கு பலம் இல்லாததாலும், பாஜக தனது முடிவிலிருந்து பல்டியடித்துள்ளதாக கூறப்படுகிறது












Click it and Unblock the Notifications