"பிரதமர் மீது நம்பிக்கை வையுங்கள்.." காஷ்மீர் தேர்தல், மாநில அந்தஸ்து எப்போது? அமித் ஷா பளிச் பதில்
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாகவும் அங்குத் தேர்தலை நடத்துவது தொடர்பாகவும் உள் துறை அமைச்சர் அமித் ஷா சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.
மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019இல் ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது.
அதன் பின்னரே ஆளுநரே அங்கு அனைத்து நடவடிக்கைகளையும் கவனித்து வந்தார். சுமார் 2 ஆண்டுகளாக அங்கு எந்தவொரு அரசியல் நடவடிக்கைகளும் இல்லாமல் இருந்து வருகிறது.
சென்னை - சேலம் 8 வழிச்சாலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் நிலை என்ன? கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்
காஷ்மீர்
இடையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் காஷ்மீரில் மீண்டும் தேர்தலை நடத்துவது குறித்த பேச்சுகள் எழுந்தது. இது தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் காஷ்மீரின் 14 முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். இதில் காஷ்மீருக்குத் தேர்தல் நடத்துவது உள்ளிட்ட பல விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. ஆனால், அதன் பின்னர் இது தொடர்பாக எந்தவொரு அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
தேர்தல் எப்போது
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா இது தொடர்பாகப் பல முக்கியத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் முன்னுரிமை பட்டியலில் ஜம்மு காஷ்மீர் உள்ளது. இந்த யூனியன் பிரதேசத்தின் வளர்ச்சிக்குத் தேவையான பல்வேறு பணிகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேர்தலை நடத்தத் தேவையான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. தொகுதி எல்லைகளை மறுவரையறை செய்யும் டிலிமிட்டேஷன் பணிகள் தற்போது தான் தொடங்கப்பட்டுள்ளன. அது முடிந்ததும் சட்டசபைத் தேர்தலை நடத்துவோம். காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்களிடையே சிலர் தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
மாநில அந்தஸ்து
அவர்கள் சொல்வதைக் காஷ்மீர் மக்கள் கேட்க வேண்டாம். சிலருக்கு அவர்கள் விரும்பியதை போல மக்களை ஏமாற்ற முடிவதில்லை. அதனால் இப்படி தேவையற்ற கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். காஷ்மீர் விவகாரம் தொடர்பாகக் குறிப்பிட்ட சிலர் தொடர்ந்து பல விஷயங்களைப் பரப்பி வருகின்றனர். ஆனால் நான் நாடாளுமன்றத்தில் உறுதியளித்தபடி ஜம்மு-காஷ்மீருக்கு நிச்சியம் மாநில அந்தஸ்து வழங்கப்படும். அதாவது ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பியவுடன், முதலில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். அதில் யாருக்கும் எவ்வித சந்தேகமும் வேண்டாம். காஷ்மீருக்கு ஜனநாயகத்தின் மூலமே வளர்ச்சி, வேலைவாய்ப்புகளைக் கொடுக்க முடியும். ஆனால் ஜனநாயகத்தை நிலைநிறுத்த, ஜம்மு காஷ்மீரில் அமைதி அவசியம்.
பிரதமர் மீது நம்பிக்கை வையுங்கள்
சில அந்நிய சக்திகளின் விருப்பங்களுக்குக் காஷ்மீர் இளைஞர்கள் பலியாகிவிட வேண்டாம் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை வையுங்கள், ஜம்மு காஷ்மீர் நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வையுங்கள். சிலர் தங்களின் அரசியல் நலன்களுக்காகப் பொய்களைப் பரப்புகிறார்கள். இதுபோன்ற பொய்களை அள்ளிவிடுபவர்களிடம் திருப்பி கேள்விகளைக் கேளுங்கள் அவர்களிடம் பதில் இருக்காது.
முதலீடு
காஷ்மீரில் முதலீடு வராது என்று சிலர் கூறினார்கள். ஆனால் ஏற்கனவே ரூ.12,000 கோடி முதலீடு வந்துவிட்டது. அதேபோல சுற்றுலாப் பயணிகளின் வருகையும் இங்கு அதிகரித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியை நோக்கிச் செல்வதையே இது காட்டுகிறது. இதற்கு உள்ளூர் நிர்வாகத்தின் முயற்சியும் பிரதமரின் வழிகாட்டுதலும் தான் காரணம். இதனால் ஜம்மு காஷ்மீரில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. வளர்ச்சி தான் நமது ஒரே இலக்கு. இதில் அனைத்து காஷ்மீர் இளைஞர்களும் ஆர்வம் செலுத்த வேண்டும். காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்படும் வரை, வெறும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே காஷ்மீரில் ஆட்சி செய்தனர். ஆனால் இப்போது 30,000 ஊராட்சி உறுப்பினர்கள் மக்களுக்குச் சேவை செய்கிறார்கள்.
பயங்கரவாத நடவடிக்கை
இதற்காகத் தான் அவர்கள் சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்கிறார்கள். எளிய மக்களிடம் அதிகாரம் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. மேலும், சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட உடன் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் அவர்கள் கூறினர். இருப்பினும், உண்மையில் சட்டப்பிரிவு 370 இருந்த வரை சட்டம்-ஒழுங்கு சீராக இருக்கவில்லை. அது ரத்து செய்யப்பட்ட உடன் தான் பயங்கரவாத நடவடிக்கைகள் 40 சதவீதமும், உயிரிழப்புகள் 57 சதவீதமும் குறைந்துள்ளது. இது வளர்ச்சிக்கும் அமைதிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதையே காட்டுகிறது. காஷ்மீர் மக்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
கல்வி
இந்திய விடுதலைக்குப் பின்னர் 2014 வரை, ஜம்மு காஷ்மீரில் 500 இடங்களுடன் வெறும் 4 மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. அப்போது மருத்துவம் படிக்க வேண்டும் என்றால் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கோ அல்லது பிற வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டி இருந்தது. இப்போது, 9 மருத்துவக் கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன, 15 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்பட்டுள்ளன, 1,100 எம்பிபிஎஸ் இடங்கள் மற்றும் 600 பாராமெடிக்கல் இடங்கள் உள்ளன. அதேபோல 70 ஆண்டுகளில் வெறும் 12,000 கோடி ரூபாய் முதலீடு வந்த நிலையில், இப்போது ஒரே வருடத்தில் ரூ.12,000 கோடி முதலீடு வந்துள்ளது. மேலும் ரூ.2,000 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது" என்றார்.