தொடர் தோல்வி...வேறு வழியின்றி புதிய கட்சியுடன் பாஜகவில் இன்று ஐக்கியமாகும் கேப்டன் அம்ரீந்தர் சிங்
டெல்லி: பஞ்சாப் மாநில முன்னாள் முதலமைச்சரும், அம்மாநில காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவருமான அம்ரிந்தர் சிங் இன்று பாஜவில் இணைகிறார்.
இவர் மாநில முதலமைச்சராக இருந்த காலத்தில், காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த நவ்ஜோத்சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் போக்கைத் தொடர்ந்து தனது பதவிக்காலம் முடியும் முன்னரே முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.
இது அம்மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், கட்சியிலிருந்தும் விலகி பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியை உருவாக்கினார்.

பஞ்சாப் லோக் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநிலத்தின் முகமாகவும், அசைக்க முடியாத நம்பிக்கையாகவும் இருந்தவர்தான் கேப்டன் அம்ரிந்தர் சிங். கடந்த 2014ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், பாஜவின் அருண் ஜெட்லிக்கு எதிராக போட்டியிட்டு 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனையடுத்து 2015ல் அம்மாநில காங்கிரஸ் தலைவராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து இவர் தலைமையில் கடந்த 2017ல் காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலை சந்தித்தது.

பதவி விலகல்
இதில் கட்சி அபார வெற்றியும் பெற்றது. இதனையடுத்து, அம்மாநில முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக்கொண்டு செயல்படத் தொடங்கினார். ஆனால் நாளடைவில் அக்கட்சியில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் இவருக்கும் தொடர் மோதல் போக்கு நீடித்து வந்தது. இதனையடுத்து சித்து கட்சியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இது இந்த மோதலை மேலும் கூர்மைப்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக, அம்ரீந்தர் சிங் தனது பதவிக்காலம் முடியும் முன்னரே பதவியிலிருந்து விலகிக்கொண்டார்.

தோல்வி
பின்னர் காங்கிரஸ் கட்சியிலிருந்தும் விலகிக்கொண்டு, பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து கடந்த சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் ஒரு இடங்களில் கூட கட்சி வெற்றியடையவில்லை. இதனையடுத்து முதுகு தண்டுவட அறுவை சிகிச்சைக்காக அம்ரீந்தர் சிங் லண்டன் சென்றிருந்தார். இதற்கு முன்னதாகவே அவர் தொடர்ச்சியாக பாஜக தலைவர்களை சந்தித்து வந்த நிலையில், விரைவில் பாஜகவில் இணைந்துவிடுவார் என்று சொல்லப்பட்டு வந்தது.

பாஜகவில் ஐக்கியம்
தற்போது இந்த கூற்றை உறுதி செய்யும் விதத்தில் இன்று அவர் பாஜகவில் இணைகிறார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் கட்சியில் இணையும் இவர் தனது 'பஞ்சாப் லோக் காங்கிரஸ்' கட்சியையும் பாஜகவில் இணைக்கிறார். இக்கட்சியில் முன்னாள் எம்எல்ஏக்கள் 7 பேரும், 1 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர். பஞ்சாப் மாநிலத்தின் அரச குடும்பத்தை சேர்ந்த அம்ரீந்தர் சிங் இரண்டு முறை அம்மாநில முதலமைச்சராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications