ப்பா அசந்து போயிட்டேன்.. புதுக்கோட்டை ஆட்சியரை பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா.. ஏன் தெரியுமா?
டெல்லி: சமீபத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற செஸ் நடனத்தை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா வெகுவாகப் பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்திலும் அந்த வீடியோவை பகிர்ந்து அதனை புகழ்ந்துள்ளார். இதனையடுத்து இந்த வீடியோ நாடு முழுவதும் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இந்த போட்டி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதேபோல இந்த விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மாநில அரசு சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டுள்ளது.
என்ன நடக்குது? வேகமாக சுழல தொடங்கும் பூமி! 24 மணி நேரத்தைவிட குறையும் ஒரு நாள்! ஆய்வாளர்கள் குழப்பம்
தொடக்கம்
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாயின்ட்ஸ் ரெசார்ட்டில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கியுள்ளது. சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் கடந்த 28ம் தேதி தொடங்கிய கோலாகல விழாவில், செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். அப்போது, இந்திய அணியினருக்கு கருப்பு காய்களை பிரதமர் தேர்வு செய்தார். அதன்படி, இந்திய வீரர், வீராங்கனைகள் கருப்பு காய்களைக் கொண்டு விளையாடுவர்.
போட்டி
செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள், நடுவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். செஸ் ஒலிம்பியாட் வரலாற்றிலேயே சென்னை போட்டிக்குத்தான் 188 அணிகள் ஓபன் பிரிவிலும், பெண்கள் பிரிவில் 162 அணிகளும் பங்கேற்றுள்ளன. உலக செஸ் சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஒலிம்பியாட் போட்டி மொத்தம் 11 சுற்றுகளைக் கொண்டது. கிளாசிக்கல் ஸ்விஸ் லீக் முறையில் ஆட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை இந்திய செஸ் கூட்டமைப்பு (ஏஐசிஎஃப்), உலக செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு அரசு சிறப்பான முறையில் நடத்தி வருகிறது.
முன்னிலை
இந்நிலையில், கடந்த 29ம் தேதி முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெற்றன. ஓபன் பிரிவிலும், மகளிர் பிரிவிலும் முதல் சுற்று ஆட்டங்கள் பரபரப்பாக நடைபெற்றன. ஒலிம்பியாட் போட்டியின் முதல் வெற்றியை ஓபன் பிரிவில் இந்தியா பி அணிக்காக விளையாடிய ரவுனக் சாத்வானி பதிவு செய்தார். அவர் தனது 36-வது நகர்த்தலில் ஐக்கிய அரபு அமீரக வீரர் ரகுமானை சாய்த்து முதல் வெற்றியை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, இந்திய பி மகளிர் அணி சிறப்பாக விளையாடி, வேல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
வீடியோ
இவ்வாறு போட்டி சிறப்பாக நடந்துகொண்டிருக்க, இந்த போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்டங்கள் தோறும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பர வீடியோ, சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
'சதுரங்க நடன சித்தரிப்பு' என பெயரிடப்பட்ட இந்த வீடியோவில் செஸ் பலகையில் செவ்வியல் மற்றும் கிராமிய நடன அம்சங்களுடன் மல்யுத்தக் காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. இறுதியில் மீசை முறுக்கிய மன்னரை, தனது வாள் வீச்சுத் திறனால் 'செக்' வைத்து நிறுத்துகிறார் எதிர் அணியின் ராணி. உரையாடல் எதுவுமின்றி பின்னணி இசையுடன் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது. கலைத் துறையில் ஆர்வம் கொண்ட புதுக்கோட்டை ஆட்சியர் கவிதா ராமுவின் முயற்சியில், இந்த வீடியோவை குறும்படங்களில் நிபுணத்துவம் கொண்ட குழுவினர் படமாக்கியுள்ளனர்.
பாராட்டு
இந்த வீடியோவை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் முயற்சிக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். மேலும் "இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த விளையாட்டு நம்மை பெருமைப்பட வைக்கிறது. நமது கற்பனையில் இந்த செஸ் காய்கள் உயிர்ப்பித்துள்ளது போன்று நடனம் உள்ளது" என பாராட்டு தெரிவித்துள்ளார். ஆனந்த் இந்த வீடியோவை பகிர்ந்ததையடுத்து பலரும் அதை ரீ-ட்வீட் செய்து பாராட்டி வருகின்றனர்.