கைது என்பது ஒருவரின் சுதந்திரத்தை குறைக்கும் கொடூர நடவடிக்கை..சிபிஐ வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து
டெல்லி: ‛‛கைது நடவடிக்கை என்பது ஒருவரின் சுதந்திரத்தை குறைக்கும் கொடூரமான நடவடிக்கை. இதனால் ஜாமின் நடவடிக்கைகளை எளிமைப்படுத்தி முறைப்படுத்த புதிய சட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்'' என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மத்திய விசாரணை அமைப்புகளில் ஒன்றான சிபிஐ, ஒருவரை கைது செய்த வழக்கு தொடர்பான மனு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு எஸ்கே கவுல், எம்எம் சுந்தரேஷ் அமர்வு விசாரணை நடத்தி நேற்று தீர்ப்பு வழங்கியது. அப்போது நாட்டில் கைது நடவடிக்கை மற்றும் ஜாமின் தொடர்பான சட்டங்கள் குறித்து சில விஷயங்களை நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிரம்பி வழியும் சிறைகள்
இந்தியாவில் உள்ள சிறைகள் விசாரணை கைதிகளால் நிரம்பி வழிகின்றன. சிறையில் இருப்போரில் மூன்றில் 2 பங்குக்கும் அதிகமானவர்கள் விசாரணை கைதிகளாக இருப்பது புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சிறையில் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதேவேளையில் குற்ற வழக்குகளின் தண்டனை விகிதம் என்பது மிகக்குறைவாகவே உள்ளது.

கைது அவசியம் இல்லை
மேலும் வழக்கு தொடர்பாக பெரும்பாலானவர்களை கைது செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இருப்பினும் கைது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஒருவரை கைது செய்யும்போது இந்திய தண்டனை சட்டப்பிரிவு 41 மற்றும் 41 ஏ ஆகியவற்றுக்கு உட்பட்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும். இதனை அதிகாரிகள் முறையாக கடைப்பிடிக்க வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்.

சுதந்திரத்தை பறிக்கும் கைது
மேலும் ஜனநாயக நாட்டில் போலீஸ் அரசாங்கம் என்ற எண்ணம் ஒருபோதும் தோன்றக்கூடாது. ஜனநாயகம், போலீஸ் அரசாங்கம் என்பது ஒன்றுக்கொன்று எதிரெதிரானவை. கைது என்பது சுதந்திரத்தை குறைக்கும் கொடூரமான நடவடிக்கை. இதனால் கைது நடவடிக்கையை கவனமாக செயல்படுத்த வேண்டும்.

புதிய சட்டம்
மேலும் ஜாமின் நடவடிக்கையை எளிமைப்படுத்தவும், முறைப்படுத்தவும் மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வர பரிசீலிக்கலாம். இதனை மத்திய அரசு செய்யும் என நம்புகிறோம். அதோடு சிறப்பு நீதிமன்றங்கள் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளை மாநில அரசு பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என நீதிபதிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications