தேசிய அளவில் செல்லும் ஆம் ஆத்மி! அடித்து தூக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்.. மம்தாவுக்கு பாவம் ஏமாற்றமே
டெல்லி: இந்திய அரசியல் நரேந்திர மோடி vs ராகுல் காந்தி என்பதில் இருந்து மெல்ல மாறி, மோடிக்கு எதிராகப் பல தலைவர்கள் முன்னிறுத்தப்பட்டு வருகின்றனர்.
கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தல்களில் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்திக்கு இடையே நேரடியாகப் போட்டி இருந்தது. ஆனால் அந்த நேரடி போட்டி இப்போது முடிவுக்கு வந்துவிட்டதாகவே பலரும் கருதுகின்றனர்.
பஞ்சாபில் அபார வெற்றி பெற்ற ஆம் ஆத்மி 42% வாக்குகள் அள்ளியது - காங் 23% சிரோன்மணி 18% பாஜக 6%
இப்போது பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல தலைவர்களும் தேசிய அரசியலில் கால்தடம் பதிக்க முயல்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடிக்கு சவால் விடுக்கும் வகையில் தங்களால் இருக்க முடியும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
3 முதல்வர்கள்
இதற்காக மாநில அளவில் ஆளுமை வாய்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் டெல்லி அரசியலில் கால் வைக்க முயல்கின்றனர். இப்போது பாஜகவுக்கு எதிராகத் தேசிய அளவில் இருக்கும் கட்சியாகக் காங்கிரஸ் உள்ளது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்குப் பதிலாக அந்த இடத்தை விரைவில் வேறொரு கட்சி பிடிக்கவும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக எதிர்த்தரப்பில் இருக்கும் 3 மாநில முதல்வர்கள் - மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலங்கானாவின் கே சந்திரசேகர் ராவ் மற்றும் டெல்லியின் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் வரும் காலத்தில் பிரதமர் பதவி பெற வேண்டும் என்ற முனைப்பில் உள்ளனர்.
ஆம் ஆத்மி
அதிலும் ஆம் ஆத்மியின் வாய்ப்பு இப்போது பிரகாசமாகி உள்ளது. பஞ்சாபில் ஆம் ஆத்மியின் அமோக வெற்றியின் மூலம், அரவிந்த் கெஜ்ரிவால் தேசிய அரசியலில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். கோவா மற்றும் மணிப்பூர் தேர்தல்களில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸின் தோல்வி அடைந்துள்ளது இந்தப் போட்டியில் மம்தாவை சற்று பின்னுக்குத் தள்ளியுள்ளது. ஆனால், இந்த முன்னிலையை வரும் காலத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் எப்படிப் பயன்படுத்த உள்ளார் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது.
கேசிஆருக்கு வாய்ப்பு குறைவு
இந்த பட்டியலில் இருக்கும் தெலங்கானா முதல்வர் கேசிஆரின் தெலுங்கானா ராஷ்டிர சமிதிக்கு தான் பிராந்திய கட்சி என்ற பிம்பம் அதிகம் உள்ளது. இதனால் அக்கட்சி தேசிய அளவில் விரைவாக வளர்வது கடினம். அக்கட்சியின் பெயரே தெலுங்கானாவில் முன்னிலைப்படுத்துவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பாஜகவுக்கு எதிரான மாற்று தாங்கள் என்ற பிம்பத்தை உருவாக்க அவர் கடுமையாக முயல்கிறார். இருப்பினும், பிராந்திய கட்சி என்ற முத்திரை அவருக்கு அதிகம் உள்ளதால், தேசிய கட்சி மாறுவதில் அவருக்குச் சவால் உள்ளது.இதனால் தேசியக் கூட்டணியை வழிநடத்த அவரது கட்சிக்குத் தீவிர வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை.
இரு மாநிலங்கள்
அதேநேரம் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளதன் மூலம் பாஜக மற்றும் காங்கிரஸுக்கு அடுத்தபடியாக இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சியில் இருக்கும் ஒரே கட்சியாக அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி மாறியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குக் கூட இரண்டு மாநிலங்களில் பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காங். பிடியை இழக்கும் மாநிலங்களை யார் பிடிப்பது என்ற போட்டியில் இப்போது ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.
மம்தா
இந்த ஐந்து மாநில தேர்தல் மம்தா பானர்ஜிக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் இடையே தேசிய அளவில் மாறும் ஒரு வாய்ப்பை அளித்திருந்தது. ஆம் ஆத்மி பஞ்சாப் மற்றும் கோவா மீதும், திரிணாமுல் காங். கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் போட்டியிட்டன. 117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாபில் 92 இடங்களில் வென்று ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்துள்ளது. அதேபோல கோவாவில் இரண்டு இடங்களில் வெற்றி பெற்றது. அதேநேரம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் கோவாவில் வெல்ல முடியவில்லை. மணிப்பூரில் கைவசம் இருந்த ஒரு இடத்தையும் இழந்தது.இந்த ஐந்து மாநிலங்களிலும் காங்கிரஸ் கடும் பின்னடைவையே சந்தித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.
தேசிய கட்சி
கோவா தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி இரண்டு இடங்களை வென்றது மட்டுமின்றி, 6 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று கோவாவில் மாநிலக் கட்சி என்ற அந்தஸ்தைப் பெறவும் தகுதி பெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆம் ஆத்மி தேசிய கட்சியாக உருவெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். கடந்த 2017 ஆம் ஆண்டிலும் இந்த இரு மாநிலங்களிலும் ஆம் ஆத்மி போட்டியிட்ட போதிலும் வெல்ல முடியவில்லை. ஒரு கட்சி நான்கு மாநிலங்களில் மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டாலோ அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் 6 சதவீத வாக்குகளைப் பெற்றாலோ தேசிய அந்தஸ்து பெறும்.
தேசிய அரசியல்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வெறு சில நன்மைகளும் உள்ளது. தேசிய அளவில் எளிதாக முன்னெடுக்கக் கூடிய நல்லாட்சி மற்றும் ஊழலற்ற அரசு ஆகியவற்றை முன்னிறுத்தித் தான் அவர் ஆம் ஆத்மி கட்சி உருவாக்கினார். ஆனால் மம்தா பானர்ஜியின் முக்கிய கவனம் மேற்கு வங்கத்திலேயே இருந்தது. 2 தேர்தல்களில் தொடர்ச்சியாக வென்ற பின்னரே, அவர் தேசிய அரசியல் நோக்கி தனது பார்வையைத் தொடங்கினார். வரும் 2024 மக்களவைத் தேர்தலில் வாரணாசியில் போட்டியிடுவது குறித்து மம்தா சூசகமாகப் பேசத் தொடங்கி உள்ளார். இதை அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே 2014இல் முயன்று உள்ளார். அவர் மோடிக்கு எதிராகப் போட்டியிட்டு, 2ஆம் இடம் பிடித்திருந்தார்.
திரிணாமுல் கஷ்டம்
ஐந்து மாநில தேர்தலுக்கு முன்னதாக, மற்ற மாநிலங்களில் கட்சியை விரிவுபடுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். குறிப்பாகக் கோவா, ஹரியானா, திரிபுரா மற்றும் மேகாலயாவில் திரிணாமுல் தனது கட்சியைத் தொடங்கியது. குறிப்பாகக் கோவாவில் முன்னாள் முதல்வர் முகுல் சங்மா உட்பட 17 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 13 பேர் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர். மேலும், தாங்கள் தான் உண்மையான காங்கிரஸ் என்ற பிரசாரத்தையும் முன்னெடுத்து மம்மா பிரசாரம் செய்தார். இருப்பினும், அது சுத்தமாக வேலைச் செய்யவில்லை.
அடுத்த வேலை
அதேநேரம் மறுபுறம் அரவிந்த் கெஜ்ரிவால், இப்போதே இந்தாண்டில் தேர்தல் நடக்கும் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியை வலுப்படுத்தும் வேலைகளைத் தொடங்கிவிட்டார். பஞ்சாபில் ஆம் ஆத்மி பெற்றுள்ள வெற்றி, பாஜகவின் பிரதான சவாலாக உருவெடுக்கும் போட்டியில் மம்தா பானர்ஜியை விட அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முன்னிலையைக் கொடுத்துள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆம் ஆத்மி முக்கிய தலைவர்களில் ஒருவரான ராகவ் சதா, "பாஜகவுக்குச் சவாலாக ஆம் ஆத்மி கட்சி மாறப் போகிறது. இனி வரும் காலங்களில் ஆம் ஆத்மி தான் இயற்கையாகவே பாஜகவுக்கு மாற்றாக இருக்கும்" என்று தெரிவித்திருந்தார்.