இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுதான் முதல் முறை.. சரித்திரத்தில் இடம் பெறும் கெஜ்ரிவால் வழக்கு
டெல்லி: தேர்தல் பிரச்சாரத்திற்காக சிறையில் இருக்கும் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு இந்திய நீதிமன்றம் நிவாரணம் வழங்குவது இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும். அமலாக்கத்துறையின் கடும் எதிர்ப்பையும் மீறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டிருப்பது நீதித்துறை வரலாற்றில் சரித்திரமாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஒன்றரை வருடங்களாக பெரிய அளவில் பேசப்பட்டு வரும் டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21-ந்தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். ஒரு மாநிலத்தின் முதல்வர் கைது செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும். அவர் டெல்லி திகார் சிறையில் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார்.

தான் கைது செய்யப்பட்டதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தனது கைது நடவடிக்கையே தவறு.. சட்டவிரோதம் என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். அதேநேரம் அரவிந்த் கெஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் எதுவும் கேட்கவில்லை.. கெஜ்ரிவால் மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தேர்தல் நேரத்தில் கைது செய்தது ஏன் என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது.. மேலும் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளிப்பது பற்றி 10-ந்தேதி (இன்று) தீர்ப்பு அளிப்பதாக நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அமலாக்கத்துறை 44 பக்க பிரமாண பத்திரத்தை உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது. அதில் அமலாக்கதுறை கூறுகையில், எத்தனையோ அரசியல்வாதிகள், சிறையில் இருந்தபடி தேர்தலில் போட்டியிட்டுள்ளார்கள். அதற்கு முன்னுதாரணங்கள் பவ இருக்கின்றன. சில அரசியல்வாதிகள் சிறையில் இருந்தபடி தேர்தலில் வெற்றியும் பெற்றுள்ளனர். ஆனால், தேர்தல் பிரசாரம் செய்வதற்காக எந்த அரசியல்வாதிக்கும் ஜாமீன் அளிக்கப்பட்டது கிடையது. அவர் வேட்பாளராக இருந்தாலும்கூட ஜாமீன் கொடுக்கப்பட்டது இதுவரை நடந்தது இல்லை.
மேலும், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது அடிப்படை உரிமை அல்ல, அரசியல் சட்ட உரிமை அல்ல, ஏன், சட்டரீதியான உரிமையும் கிடையாது.
எனவே உண்மை மற்றும் சட்டரீதியான அம்சங்களை கருத்தில்கொண்டு, இடைக்கால ஜாமீன் கோரிக்கையை நிராகரிக்க வேண்டும். இக்கோரிக்கை, அரசியல் சட்டத்தின் அடிப்படை அம்சமான சட்டத்தின் ஆட்சியை மீறக்கூடியதாக இருக்கும். தேர்தல் பிரசாரம் செய்வதற்காக அரசியல்வாதிக்கு எந்த சிறப்பு சலுகையும் காட்டக்கூடாது. அப்படி காட்டுவது சமத்துவத்துக்கு எதிரானது.
ஒரு அரசியல் தலைவரின் பிரசாரத்தை விட ஒரு விவசாயி அல்லது ஒரு வியாபாரியின் பணி எவ்விதத்திலும் முக்கியத்துவம் குறைந்தது கிடையாது. அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் அளித்தால், சிறையில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளும் அதே கோரிக்கையை எழுப்புவதை குறை காண முடியாது. இது தவறான முன்னுதாரணமாகி விடும். மற்றவர்களை போலவே அவரும் நடத்தப்பட வேண்டும் என்று அமலாக்கத்துறை நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கூறியிருந்தது.
இதனிடையே இன்று தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், "2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது. ஒன்றரை ஆண்டுகளாக ஏன் அவரை கைது செய்யவில்லை? தேர்தலுக்கு முன்போ அல்லது தேர்தல் முடிந்த பிறகு கூட கைது செய்திருக்கலாம். தேர்தல் நேரத்தில் கைது செய்ததால் என்ன மாற்றம் வந்துவிடப் போகிறது? எனவே ஜூன் ஒன்றாம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம்" என தீர்ப்பளித்தது. மேலும் அவர் பிரசாரத்தில் ஈடுபடவும் தடை ஏதும் உச்ச நீதிமன்றம் சார்பில் விதிக்கப்படவில்லை.
தேர்தல் பிரச்சாரத்திற்காக சிறையில் இருக்கும் ஒரு அரசியல் கட்சித் தலைவருக்கு இந்திய நீதிமன்றம் நிவாரணம் வழங்குவது இந்திய நீதித்துறை வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையாகும். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை எதிர்க்கட்சிகளை வேட்டையாட மத்திய அரசு மற்றும் அமைச்சர்கள் பயன்படுத்துவதாக வாதிட்ட கெஜ்ரிவாலின் வாதம் இந்த வழக்கில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications