“மிஷன் 2024”.. பாஜக களமிறக்கும் “சாணக்கியர்”! 3 மாநிலங்களுக்கு “டார்கெட்” - மலருமா “தாமரை”?
டெல்லி: 2024 மக்களவைத் தேர்தலுக்கு தயாராகி வரும் பாஜக, கடந்த முறை குறைவான எம்.பி. இடங்களை வென்ற மேற்கு வங்கம், ஒடிசா, தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்களில் கட்சியை வளர்க்க, பாஜக தேசிய பொதுச்செயலாளர் சுனில் பன்சாலை களமிறக்கி இருக்கிறது.
மத்தியில் ஆளும் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாவின் ஆட்சிகாலம் 2024 ஆம் ஆண்டு முடிவுக்கு வருகிறது. இதனை தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன் தயாரிப்பு பணிகளையும் இப்போதே தொடங்கி இருக்கிறது பாஜக.
குறிப்பாக பாஜக இதுவரை வெல்ல முடியாத மாநிலங்களில் எப்படியாவது கொடியை நாட்ட வேண்டும் என பல்வேறு காய்களை நகர்த்தி வருகிறது மேலிடம். தென் மாநிலங்களான ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளாவில் அதிகாரத்தை நிலைநாட்ட அக்கட்சி முயல்கிறது.
மிசோரம் பாஜக நிகழ்ச்சிகள் பைபிள் வாசகங்கள், ஆமென் சொல்லியே தொடக்கம்..வானதி சீனிவாசன் பெருமிதம்
ஆபரேஷன் சவுத்
கடந்த ஜூலை மாதம் தெலுங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத்தில் ஆபரேசன் சவுத் இந்தியா திட்டத்தை மத்திய உள்துறை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொண்டு வரும் அக்கட்சி, பல்வேறு நடைமுறை செயல்பாடுகளை மாற்றியும் இருக்கிறது.
மோடி வருகை
தென்மாநிலங்களில் பாஜகவுக்கு அதிக எதிர்ப்பு இருக்கும் தமிழ்நாட்டிற்கு குறுகிய கால இடைவெளியில் பிரதமர் நரேந்திர மோடி 2 முறை வந்து சென்று இருக்கிறார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் அண்மையில் சிவகங்கை மாவட்டத்துக்கு வருகை தந்தார். இதேபோல் கேரளா, தெலுங்கானாவுக்கு அமித்ஷா அண்மையில் சென்றார்.
மிஷன் 2024
இந்த நிலையில் 2024 தேர்தலை மனதில் வைத்து கடந்த ஆகஸ்டு மாதம் பாஜக புதிய தேசிய பொதுச்செயலாளராக சுனில் பன்சாலை நியமித்தது. இவருக்கு கட்சித் தலைமை வழங்கி இருக்கும் பொறுப்பு என்னவென்றால், இதுவரை பாஜகவால் வெற்றிபெற்று ஆட்சி அமைக்க முடியாத மேற்கு வங்கம், தெலுங்கானா மற்றும் ஒடிசாவில் கட்சியை வளர்த்து 2024 தேர்தலில் அதிக இடங்களில் வெற்றிபெற வைப்பதுதான்.
3 மாநிலங்கள்
மேற்குவங்கம், ஒடிசா, தெலுங்கானா ஆகிய 3 மாநிலங்களில் மொத்தம் 80 தொகுதிகள் உள்ளன. இதில் 30 தொகுதிகளில் மட்டுமே கடந்த முறை பாஜக வென்றுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் தேசியக் கட்சிகளை விட மாநில கட்சிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. மாநில கட்சிகளே 3 மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கிறார்கள். இதில் ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் மட்டுமே பாஜகவுடன் நட்புறவில் இருந்து வருகிறார்.
மேற்கு வங்கம்
மேற்கு வங்கத்தில் இதற்கான வேலையை பன்சால் ஏற்கனவே தொடங்கிவிட்டார் என்றே தெரிகிறது. கொல்கத்தாவில் பாஜக நடத்திய பேரணியில் போலீசார் தடியடி நடத்தியதில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து வருகிறார் அவர். மேற்கு வங்க பாஜகவிற்குள் பூசல் இருப்பதாக டெல்லிக்கு புகார் சென்றுள்ள நிலையில் அதையும் தீர்க்கும் பணியில் பன்சால் ஈடுபட்டு வருகிறார்.
அணி திரட்டல்
மேற்கு வங்கத்தில் மாவட்ட, தாலுக்கா அளவிலான தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து பேசி போலீசாரின் தீவிர நடவடிக்கைகளுக்கு எதிராக அணி திரட்டி வருகிறார். இதன் மூலம் கீழ் மட்ட தொண்டர்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும் என்றும், மேலிடத்தோடு தொடர்பை ஏற்படுத்திக் கொடுக்கும் எனவும் அவர் நம்புகிறார். சுனில் பன்சால் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டது பாஜகவினருக்கு நம்பிக்கையளித்துள்ளதாக கூறப்படுகிறது.
யார் இந்த சுனில் பன்சால்?
ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட சுனில் பன்சால் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர். 53 வயதாகும் இவர் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் கொண்டு வர அமித்ஷாவுடன் சேர்ந்து பணியாற்றி இருக்கிறார். நிர்வாகத் திறன், அரசியல் சாணக்கியத்தனம், அடிமட்டத் தொண்டர்கள் முதல் உயர்மட்ட நிர்வாகிகள் வரை நெருக்கமான தொடர்புகொண்டவர் சுனில் பன்சால் எனக்கூறப்படுகிறது.