4 குழந்தைகளுக்கு அப்பா.. மக்கள் தொகையை கட்டுப்படுத்த.. தனிநபர் மசோதா தாக்கல் செய்த பாஜக எம்பி
டெல்லி: வரும் 2023ம் ஆண்டிற்குள் மக்கள் தொகை எண்ணிக்கையில் இந்தியா சீனாவை முந்திவிடும் என ஐ.நா கணித்திருக்கும் நிலையில் மக்கள் தொகைக் கட்டுப்பாடு குறித்த தனிநபர் மசோதாவை தாக்கல் செய்யப் போவதாக நடிகரும் பாரதிய ஜனதா கட்சித் தலைவருமான ரவி கிஷன் தற்போது தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் கோரக்பூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ரவி கிஷனுக்கு 4 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் இவர் மேற்குறிப்பிட்ட கருத்தை வலியுறுத்தியுள்ளார். மேலும், "மக்கள்தொகை கட்டுப்பாட்டு மசோதா கொண்டு வரப்பட்டால் மட்டுமே நாம் விஸ்வ குருவாக இருக்க முடியும்.

மக்கள் தொகையை கட்டுக்குள் கொண்டு வருவது மிகவும் முக்கியம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுக்கான எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்று சுகாதாரத் துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக எம்.பி ரவி கிஷன் தனிநபர் மசோதா குறித்து பேசியுள்ளார். மக்கள் தொகை கட்டுப்பாட்டை பொறுத்த அளவில் "தேசிய மக்கள் தொகைக் கொள்கை 2000 மற்றும் தேசிய சுகாதாரக் கொள்கை 2017 ஆகியவற்றின் படி, 2045 ஆம் ஆண்டிற்குள் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு முயற்சித்து வருவதாக" பவார் கூறியிருந்தார்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த மசோதா தாக்கல் செய்த இவருக்கு 3 பெண் குழந்தைகள் உட்பட 4 குழந்தைகள் உள்ளனர். ரவி கிஷன் மட்டுமல்லாது மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் உட்பட பல பாஜக தலைவர்கள் இந்தியாவில் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தை தடுக்க சட்டங்களை கொண்டு வர வேண்டும் என்று கோரி வருகின்றனர்.
சமீபத்தில் உலக மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து ஐநா சில புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அதன்படி, நடப்பாண்டு நவம்பர் 15ல் உலகம் முழுவதும் மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல 2030ல் 850 கோடி, 2050ல் 970 கோடி, 2080ல் 1,040 கோடி என மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படும் ஜூலை 11ம் தேதி ஐநா வெளியிட்டது.
மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ள நாடுகளாக இந்தியா, காங்கோ, எகிப்து, எத்தோப்பியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் தான்ஜானியா ஆகிய நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சீனாவை பொறுத்த அளவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் முன்னதாக இந்தியா 2027ம் ஆண்டில்தான் மக்கள் தொகை அதிகரிப்பில் சீனாவை முந்தும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இது 2023ம் ஆண்டிலேயே சாத்தியமாகும் என ஐநா கூறுகிறது.












Click it and Unblock the Notifications