'நிலக்கரி இல்லை..2நாட்களில் பவர்கட் நிச்சயம்..' தலைநகர் டெல்லியிலேயே இப்படி என்றால் மற்ற பகுதிகளில்?
டெல்லி: இன்னும் 2 நாட்களில் நிலக்கரி விநியோகம் மேம்படவில்லை என்றால் தலைநகர் டெல்லி இருளில் மூழ்கும் அபாயம் உள்ளதாக டெல்லி ஆம் ஆத்மி அரசு எச்சரித்துள்ளது. ஏற்கனவே, .தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் நிலக்கரி பற்றாக்குறை குறித்து கவலை எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மொத்தம் 135 நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. நாட்டின் மின் தேவையில் சுமார் 70% வரை இந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது.
பல்வேறு காரணங்களால் நாட்டில் நிலக்கரி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலையும் கடந்த சில மாதங்களில் இரட்டிப்பாடியுள்ளது.

நிலக்கரி பற்றாக்குறை
இதன் காரணமாக நாட்டில் நிலக்கரிக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாட்டில் உள்ள பெரும்பான்மையான மின் உற்பத்தி நிலையங்களில் அடுத்த 3 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அடுத்து வரும் காலத்தில் நாட்டில் மின் தடை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். அப்படி ஏற்பட்டால் ஏற்கனவே கொரோனா, டெங்கு போன்ற நோய்களின் பாதிப்பு மேலும் பல மடங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

கையிருப்பு இல்லை
இந்நிலையில் இது குறித்து டெல்லி ஆம் ஆத்மி அரசின் மின்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், "நிலக்கரி விநியோகம் மேம்படவில்லை என்றால், இரண்டு நாட்களில் தலைநகர் டெல்லியில் மின்தடை ஏற்படும். டெல்லிக்கு மின்சாரம் வழங்கும் நிலக்கரி மின் உற்பத்தி நிலையங்கள் குறைந்தபட்சம் ஒரு மாத நிலக்கரியைக் கையிருப்பாக வைத்திருக்க வேண்டும், ஆனால் இப்போது அவர்களிடம் ஒரு நாளைக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே உள்ளது.

அரசியல் செய்ய முயற்சி
மத்திய அரசு ரயில்களைப் பயன்படுத்தி வேகமாக ஆலைகளுக்கு ஆலைகளுக்கு நிலக்கரி சென்று சேருவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து ஆலைகளும் ஏற்கனவே மொத்த கொள்ளவில் வெறும் 55 சதவிகிதத்தில் மட்டுமே இயங்குகிறது. கொரோனா 2ஆம் அலை காலத்தில் எப்படி ஆக்சிஜன் நெருக்கடி மனிதர்களால் உருவாக்கப்பட்டதோ, அதேபோல இதுவும் மனித தவறால் உருவாக்கப்பட்டது என்றே தோன்றுகிறது. இந்த விஷயத்தில் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். மிகப் பெரிய பிரச்சினையை உருவாக்கி, அதைத் தீர்ப்பதன் மூலம் பெரும் சாதனையைச் செய்துவிட்டதாக இமேஜை உருவாக்கச் சிலர் முயல்கின்றனர்" என்று அவர் தெரிவித்தார்.

தலைநகரில் மின்தடை
டெல்லியில் எரிவாயு மூலம் 1,300 மெகாவாட் (MW) மின்சாரம் தயாரிக்கக் கூடிய ஆலைகள் உள்ளன. இது குறித்து அவர் கூறுகையில் "டெல்லியில் இதுபோல உள்ள மூன்று நிறுவனங்களும் மின் விநியோகஸ்தர்கள் தானே தவிர மின் உற்பத்தியாளர்கள் அல்ல. நாங்கள் மின்சாரத்திற்கு மத்திய அரசையே சார்ந்துள்ளோம். நிலக்கரி சப்ளை மேம்படவில்லை என்றால், இரண்டு நாட்களில் தலைநகர் டெல்லியில் மின்தடை ஏற்படும்" என்று அவர் தெரிவித்தார்

மோசமான நிலை
இந்தியாவில் அக்டோபர் முதல் ஏழு நாட்களில் மட்டும் மின் விநியோகப் பற்றாக்குறை 11.2 சதவிகிதமாக இருந்துள்ளது. வரும் காலத்தில் நாம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சினையின் தொடக்கமாகவே இது பார்க்கப்படுகிறது. ஏற்கனவே, .தமிழ்நாடு மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் நிலக்கரி பற்றாக்குறை குறித்து கவலை எழுப்பியிருந்தது நிலையில், இப்போது அந்தப் பட்டியலில் டெல்லியும் இணைந்துள்ளது. தலைநகர் டெல்லியிலேயே மின்தடை ஏற்பட வாய்ப்புள்ளது என்றால் மற்ற பகுதிகளில் நிலைமை எந்தளவு மோசமாகச் செல்லும் என்றும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்,

என்ன காரணம்
கடந்த ஆண்டு கொரோனா காலத்தில் அனைத்து நடவடிக்கைகளும் குறைந்தன. இதனால் மின் தேவை தொடங்கி எரிபொருள் விலை வரை அனைத்துமே குறைந்தன. இப்போது வேக்சின் உள்ளிட்ட பல்வேறு பணிகள் காரணமாக நிலைமை மெல்ல மேம்பட்டு வரும் நிலையில், மின் தேவையும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்த தேவையைப் பூர்த்தி செய்ய முடியாததாலேயே நிலக்கரி போன்றவற்றின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications