5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8% வளர்ச்சி.. நாடாளுமன்ற வளாகத்தில் மோடி பெருமிதம்!
டெல்லி: 5 ஆண்டுகளில் நமது நாட்டின் பொருளாதாரம் 8% வளர்ச்சி அடைந்துள்ளதாக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். மேலும் முன்னேறிய நாடுகளைவிட இந்தியாவின் பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது; நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் உன்னதமான பட்ஜெட்; அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்களுக்கு திசை காட்டக் கூடிய பட்ஜெட்டாக இருக்கும் என்றும் செய்தியாளர்களிடம் பிரதமர் மோடி தெரிவித்தார்.
18-வது லோக்சபாவின் 2-வது கூட்டத் தொடர் இன்று முதல் ஆகஸ்ட் 12-ந் தேதி வரை 19 அமர்வுகளாக நடைபெற உள்ளது. இந்த மழைக்கால மற்றும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். நாளை மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்வார்.

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக இன்று செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பில் பிரதமர் மோடி கூறியதாவது: லோக்சபா தேர்தலுக்காக கடந்த சில மாதங்களாக பிரசாரம் உள்ளிட்டவற்றில் போட்டி போட்டுக் கொண்டிருந்தோம். தற்போது லோக்சபா தேர்தல் முடிவடைந்துவிட்டது. 2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது இத்தகைய விளையாட்டுகளை மீண்டும் நாம் வைத்துக் கொள்ளலாம். அதுவரை மக்களுக்காக நாம் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும்.
வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதுதான் எங்கள் கனவு. 2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவோம். கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 8% ஆக அதிகரித்துள்ளது. முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத்தை விட நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி மிக வேகமாக இருக்கிறது.
60 ஆண்டுகளுக்குப் பின்னர் 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைத்துள்ளோம். 3-வது முறையாக அமைக்கப்பட்டுள்ள ஆட்சியில் நாளை முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் உன்னதமானது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு எங்களுக்கு திசைவழிகாட்டியாக நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் இருக்கும்.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தர்கள் எதிர்ப்பு உணர்வுகளை கைவிட்டு அதில் இருந்து வெளியே வர வேண்டும். மக்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்த அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும். நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்புதர வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications