மத்திய பட்ஜெட்... மக்கள் மனதில் என்ன... சி வோட்டர் கருத்துக் கணிப்பு
டெல்லி : நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட் எப்படி உள்ளது, அது பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என சி வோட்டர் கருத்துக் கணிப்பு நடத்தி, முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் 49.7 சதவீதம் மக்கள், எதிர்கால செலவுகளை சமாளிக்க சிரமப்பட வேண்டி இருக்கும் என அச்சம் தெரிவித்துள்ளனர்.
2021-22 ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் சாமானிய மக்கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இந்த பட்ஜெட் அதிக அளவில் அதிருப்தியையும், சிறிதளவு பாராட்டையும் பெற்றது என்றே கூறலாம்.
பட்ஜெட் எப்படி இருந்தது என்பது பற்றி அரசியல் கட்சி தலைவர்கள், நிபுணர்கள் நேற்று கருத்து தெரிவித்து விட்டனர். ஆனால் மக்கள் என்ன சொல்கிறார்கள், அவர்கள் மனதில் என்ன உள்ளது னெ்பதை தெரிந்து கொள்ள சி வோட்டர் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது.
கருத்து கணிப்பு முடிவு
1200 பேரிடம் நடத்தப்பட்ட இந்த மாதிரி கருத்து கணிப்பில் 36.4 சதவீதம் பேர், பிரதமரும் நிதியமைச்சரும் தாங்கள் எதிர்பார்த்ததை விட மோசமான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளனர் என தெரிவித்துள்ளனர். 25.1 சதவீதம் பேர் பரவாயில்லை என்றும், 27.6 சதவீதம் பேர் எதிர்பார்த்த ஒன்று தான் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதிகமான எதிர்ப்பு கருத்துக்கள் :
2014 ம் ஆண்டு மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு பட்ஜெட்டிற்கு கிடைத்த மிக அதிக அளவிலான மோசமான கருத்துக்களை இந்த பட்ஜெட் பெற்றுள்ளதாக கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. இதற்கு முன் 2018 ல் மத்திய பட்ஜெட்டிற்கு கிடைத்த 34.9 சதவீதம் தான் அதிகமான எதிர்ப்பு கருத்து அளவாக இருந்தது. அதுவும் 2017 ல் ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்ட பிறகு நடத்தப்பட்ட கருத்து கணிப்பு என்பதால் இந்த எதிர்ப்பு கருத்துக்கள் பதிவிடப்பட்டன. ஆனால் இந்த முறை அதை விட அதிகமாக 36.4 சதவீதம் பேர் எதிரான கருத்தை பதிவிட்டுள்ளனர்.
பட்ஜெட் திருப்தி தருகிறதா :
பட்ஜெட் திருப்தி அளிக்கிறதா என கேட்கப்பட்ட கேள்விக்கு 45.1 சதவீதம் பேர் இல்லை எனவும், 35.8 சதவீதம் பேர் ஆம் எனவும் தெரிவித்துள்ளனர். 2020 ல் 64 சதவீதம் பேர் பட்ஜெட் திருப்தி அளிப்பதாக கூறி இருந்தனர்.
என்ன ரேட்டிங் கொடுப்பீங்க :
பட்ஜெட்டிற்கு 1 முதல் 10 வரை ரேட்டிங் கொடுங்கள் என கேட்டதற்கு 5.3 என கொடுத்துள்ளனர். 2020 பட்ஜெட்டிற்கு 7.1 எனவும், 2018 பட்ஜெட்டிற்கு 4.7 எனவும், 2017 பட்ஜெட்டிற்கு 5.2 எனவும் ரேட்டிங் கொடுக்கப்பட்டிருந்தது. ரேட்டிங் அளவு குறைந்ததற்கு பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியன காரணங்களாக கூறப்பட்டது.
அச்சம் தெரிவித்த மக்கள் :
பணவீக்கம் மற்றும் வீட்டு செலவீனங்களை சமாளிப்பது சிரமமாக இருக்கும் என அச்சமும், கவலையும் தெரிவித்துள்ளனர். அடுத்த ஓராண்டு செலவீனங்களை சமாளிக்க முடியுமா என்ற கேள்வக்கு 49.7 சதவீதம் பேர் சிரமமாக இருக்கும் என தெரிவித்துள்ளனர். நிலைமை மோசமாகும் என 29 சதவீதம் பேரும், எதுவும் மாறாது என 30.4 சதவீதம் பேரும், நிலைமை மேம்படும் என 27.6 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.