ஆபரேஷன் கமலாவின் "மாஸ்டர்மைன்ட்".. மன்னர் குடும்ப வாரிசு.. சிந்தியாவிற்கு அமைச்சர் பதவி பார்சல்!
டெல்லி: மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்று கடந்த ஒன்றரை வருடங்களாக கடுமையாக முயற்சி செய்து கொண்டு இருந்த ஜோதிராத்திய சிந்தியாவிற்கு பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்று வெளியான புதிய அமைச்சரவை லிஸ்டில் இவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
ஹவுஸ் ஆப் சிந்தியா எனப்படும் குவாலியர் பகுதியை ஆண்ட சிறு மன்னர் குடும்பத்தின் வாரிசுதான் ஜோதிராத்திய சிந்தியா. மத்திய பிரதேசத்தில் வலுவான அரசியல் குடும்பம் ஜோதிராத்திய சிந்தியாவுடையது. எப்போதும் அதிகாரத்தில் இருந்து பழகிய குடும்பம் இவருடையது.
2001ல் அப்பா மாதவ்ராவ் சிந்தியா எம்பியாக இருக்கும் போது விமான விபத்தில் பலியானார். இதனால் அதே வருடம் ஜோதிராத்திய சிந்தியா அரசியலில் நுழைந்து, காங்கிரஸ் சார்பாக அப்பாவின் குணா தொகுதியில் போட்டியிட்டு லோக்சபா எம்பியானார்.

காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியில் கடந்த 20 வருடங்களாக மிக முக்கியமான உறுப்பினராக மதிக்கப்பட்டவர் ஜோதிராத்திய சிந்தியா. காங்கிரசின் அடுத்த தலைவர் ரேசில் இருந்தவர். மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது, அவரின் அமைச்சரவையில் பல்வேறு இணை அமைச்சர் பொறுப்புகளை வகித்து இருக்கிறார். மத்திய பிரதேசத்தில் கடந்த சட்டசபை தேர்தலின் போது எம்எல்ஏவாக தேர்வானார். அப்போது மத்திய பிரதேச முதல்வர் பதவி இவருக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால்
இவருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் கமல் நாத்திற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவியது. கடைசியில் ராகுல் காந்தி கமல் நாத்தை முதல்வராக தேர்வு செய்தார். முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் இருந்த ஜோதிராத்திய சிந்தியா கட்சி மாறுவதற்கு தயாராகிக்கொண்டு இருந்தார். நேரம் பார்த்து, கடந்த வருடம் மகாராஷ்டிராவில் பாஜகவுடன் இணைந்து ஜோதிராத்திய சிந்தியா காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தார்.

20 வருடம்
20 வருடமாக காங்கிரஸ் உடன் இருந்த உறவை துண்டித்துவிட்டு 22 எம்எல்ஏக்களுடன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, கமல்நாத் ஆட்சியை ஜோதிராத்திய சிந்தியா கவிழ்த்தார். ஆபரேஷன் கமலாவை மத்திய பிரதேசத்தில் வெற்றிகரமாக ஜோதிராத்திய சிந்தியா நடத்தி காட்டினார். அப்போது ஜோதிராத்திய சிந்தியா இடைத்தேர்தலில் நிற்க வைக்கப்பட்டு மத்திய பிரதேச முதல்வர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அமைச்சர்
ஆனால் மாறாக ஜூன் 20ம் தேதி ராஜ்ய சபா எம்பியாக பாஜக இவரை தேர்வு செய்தது. அப்போதே ஜோதிராத்திய சிந்தியாவிற்கு முக்கிய அமைச்சரவை பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சரவை விரிவாக்கத்திற்காக அவர் காக்க வைக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது மன்னர்குடும்பத்தின் வாரிசுக்கு அமைச்சர் பதவி ஒருவழியாக கிடைத்துள்ளது.

அரசியல்
அரசியல், குடும்பம் தாண்டி கல்வி ரீதியாக ஜோதிராத்திய சிந்தியா நல்ல பின்புலம் கொண்டவர். ஹார்டுவர்டு பல்கலையில் இவர் இளங்கலை படித்துள்ளார். அதேபோல் ஸ்டான்போர்ட் பிசினஸ் கல்லூரியில் அமெரிக்காவில் படித்து இருக்கிறார். அமைச்சராகி இருக்கும் ஜோதிராத்திய சிந்தியாவிற்கு முக்கியமான துறை ஒதுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications