தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீர்.. கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!
டெல்லி: செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது.ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது.
இந்த காவிரி நீர்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கிறது. ஆனால் இந்த ஒப்பந்த விதிகளை மீறி கர்நாடக அரசின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைக்கு தமிழ்நாட்டில் இருந்து பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

மேகதாது திட்டம்
பெங்களுரு நகரில் குடிநீர் பற்றாக்குறை உள்ளது. எனவே மேகதாது திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம் என்று கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா விடாப்பிடியாக கூறினார். இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் வரத்து கடுமையாக பாதிக்கப்படும் என்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இதற்கு ஒருசேர எதிர்ப்பு தெரிவித்தன.

மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு
மேகதாது அணை திட்டத்தை கைவிட வேண்டும் என்றும் இது இரு மாநில நல்லுறவுக்கும் உகந்தது அல்ல என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பாவுக்கு வலியுறுத்தி இருந்தார். சமீபத்தில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்திலும் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதி கர்நாடகாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

அனைத்து கட்சிகள்
மேலும் மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி கொடுக்க கூடாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். இதுதவிர மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுத்தனர்.

காவிரி மேலாண்மை ஆணையம்
இந்த நிலையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 14-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் சார்பில் பொதுப்பணித் துறை செயலர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப பிரிவு தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

28 டிஎம்சி
தமிழ்நாட்டுக்கு அக்டோபர் மாதத்திற்கான நீர் பங்கீட்டையும் உடனே வழங்க கார்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் வரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நிலுவை நீரை வழங்க கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்திற்கு 28 டிஎம்சி காவிரி நீரை உடனே திறக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது விவகாரம் குறித்து பேசுவதற்கு கர்நாடக குழுவுக்கு, தமிழக குழு எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications