தொண்டு நிறுவனங்களின் வெளிநாட்டு நன்கொடை.. சென்னை உட்பட 40 இடங்களில் சிபிஐ அதிரடி ரெய்டு!
டெல்லி: தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டில் இருந்து நன்கொடை பெறுவதில் முறைகேடு உள்ளதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இதில் சிபிஐ முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்தியாவில் உள்ள தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற வேண்டும் என்றால் அவை மத்திய அரசின் விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி இதற்கான உரிமத்தைப் பெற வேண்டும்.
அப்படி விதிமுறைகளை முறையாகப் பின்பற்றாத தொண்டு நிறுவனங்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

10 பேர் கைது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், நாட்டில் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் அனுமதியை இழந்தது. சில குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை விதிகளுக்குப் புறம்பாகப் பயன்படுத்துவதாகப் புகார்கள் எழுந்தன. இதனிடையே வெளிநாட்டு நிதியுதவி விதிகளை மீறியதாகக் கூறப்படும் தொண்டு நிறுவனங்களுக்காக லஞ்சம் வாங்கியதாக 5 அரசு அதிகாரிகள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிரடி ரெய்டு
இது தொடர்பாக நாடு முழுக்க சுமார் 40 இடங்களில் சிபிஐ சோதனை நடத்திய நிலையில், அதன் பின்னரே இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சிபிஐ வட்டாரங்கள், "உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த சில அதிகாரிகள், சில குறிப்பிட்ட தொண்டு நிறுவனங்களிடம் இருந்து லஞ்சத்தைப் பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறும் அனுமதியை வழங்கி உள்ளனர்.

ரூ. 2 கோடி சட்ட விரோத பரிவர்த்தனைகள்
இந்த விவகாரத்தில் லஞ்சம் பெற்ற அனைத்து அதிகாரிகளும் கையும் களவுமாகக் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று அவர் தெரிவித்தார். இதற்காக டெல்லி, ராஜஸ்தான், சென்னை, மைசூர் உள்ளிட்ட நகரங்களில் சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் ஹவாலா சேனல்கள் மூலம் நடத்தப்பட்ட சுமார் ரூ. 2 கோடி சட்ட விரோதமான பரிவர்த்தனைகள் குறித்தும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிபிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு நன்கொடைகள்
வெளிநாட்டு நன்கொடைகளை ஒழுங்குபடுத்த நமது நாட்டில் Foreign Contribution (Regulation) Act என்ற சட்டம் உள்ளது.. வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நன்கொடைகள் உள்நாட்டு பாதுகாப்பைப் பாதிக்காது என்பதை இச்சட்டம் உறுதி செய்கிறது. இந்த FCRA அனுமதி ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும். சமூக, கல்வி, மத, பொருளாதார மற்றும் கலாசார நோக்கங்களுக்காக வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறலாம். இந்த நிறுவனங்கள் அனைத்தும் கட்டாயம் வருமான வரி சட்டத்தின் கீழ் ஆண்டு வருமானத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.












Click it and Unblock the Notifications