சிபிஐயில் புது குழப்பம்.. உச்ச நீதிமன்ற உத்தரவை மீறினாரா இடைக்கால இயக்குநர்?
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவை மீறி சிபிஐ அமைப்பின் செயல் தலைவராக உள்ள நாகேஸ்வரராவ் முக்கியமான வழக்கு ஒன்று முடித்து வைத்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சிபிஐ இயக்குனராக பதவி வகித்த அளவுக்கு வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக பதவி வகித்த ராகேஷ் அஸ்தானா, ஆகியோர் நள்ளிரவோடு பணியிடமாக கட்டாயப்படுத்தி அனுப்பி வைக்கப்பட்டு அக்டோபர் 23ம் தேதி சிபிஐ அமைப்பின் இடைக்கால இயக்குநராக நியமிக்கப்பட்டவர்தான் நாகேஷ்வரராவ்.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து மூன்று நாட்களுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தை நாடினார் அலோக் வர்மா.
உச்ச நீதிமன்ற உத்தரவு
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இடைக்கால சிபிஐ இயக்குனர் நாகேஷ்வர ராவ் வழக்கமான அலுவலக பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றும், கொள்கை முடிவுகள் எதையும் எடுக்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில்தான், இம்மாதத்தின் துவக்கத்தில் முக்கியமான ஒரு வழக்கை நாகேஷ்வரராவ் முடித்து வைத்து உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவ்வாறு வழக்கை முடித்து வைப்பது என்பது கொள்கை முடிவு என்பதால் இது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானதாக பார்க்கப்படுகிறது.
வழக்கு பின்னணி
சர்ச்சைக்குரிய வழக்கு என்பது இதுதான்: 2015ம் ஆண்டு, ஜனவரி மாதம், வருமான வரித்துறை இணை கமிஷனர் அலுவலகங்கள், வீடுகளில் சிபிஐ ரெய்டு நடத்தியது. அப்போது, ஆடிட்டர் சஞ்சய் பண்டாரி என்பவர்தான், தனது வாடிக்கையாளர்கள் மற்றும், வருமான வரி அதிகாரிகள் நடுவே இடைத் தரகராக செயல்பட்டுள்ளது தெரியவந்தது. வருமான வரித்துறையினருக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து லஞ்ச பணத்தை பெற்றுக்கொடுத்து, வருமான வரி ஏய்ப்பு செய்ய இவர் உடந்தையாக இருந்துள்ளார்.
மூத்த அதிகாரிகள்
இதையடுத்து சிபிஐ வழக்குப்பதிவு செய்து நாடு முழுக்க ரெய்டுகளை நடத்தியது. வருமான வரித்துறை முதன்மை கமிஷனர், மிட்டல், வருமான வரித்துறை கூடுதல் கமிஷனர் (பெங்களூர்) டி.என்.பிரகாஷ், சென்னை மண்டல, துணை கமிஷனர்கள், ஆர்.வி.ஹரூன் பிரசாத் மற்றும் முரளி மோகன், கமிஷனர் விஜயலட்சுமி, மும்பை கூடுதல் கமிஷனர் பாண்டியன், மும்பை கமிஷனர் லட்சுமி பரபிரசாத, கூடுதல் இயக்குநர் ஜெனரல்-காசியாபாத்- விக்ரம் கவுர் மற்றும் மும்பை கூடுதல் இயக்குநர் ராஜேந்திர குமார் ஆகியோர் பெயர்களை வழக்கில் சேர்த்தது சிபிஐ.
ஆதாரம் இல்லை
சென்னையில் சிபிஐ இணை இயக்குநராக நாகேஷ்வரராவ் பதவி வகித்து வந்ததால், இந்த வழக்கு அவர் தலைமையில் விசாரிக்கப்பட்டது. ஆனால், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, வழக்கை கைவிட நாகேஷ்வரராவ் கடந்த மார்ச் மாதம், கோரிக்கைவிடுத்ததாகவும், ஆனால் இதை எதிர்த்த போலீஸ் அதிகாரிகள் தேன்மொழி மற்றும் பிரபு ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. கடந்த ஜூன் மாதம் அலோக் வர்மா, மதுரை சிபிஐ அலுவலகத்தை திறந்து வைக்க வந்தபோது, அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க நாகேஷ்வரராவிடம் வற்புறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
சிபிஐ வட்டாரம்
அதேநேரம் சிபிஐ வட்டாரங்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள தகவல்படி, இந்த வழக்கு மார்ச் மாதம் 14-ம் தேதியே முடித்து வைக்கப்பட்டதாகவும், மீண்டும் அதை விசாரணை நடத்த வேண்டும் என்று நாகேஷ்வர ராவிடம் அந்த கோப்பு அனுப்பப்பட்டதாகவும், அவ்வாறு மறுபடியும் விசாரணை ஆரம்பிப்பது என்பது கொள்கை முடிவு என்பதால் நாகேஷ்வர ராவ் மறுத்ததாகவும் எனவே அந்த வழக்கு இப்போது மூடி வைக்கப்படுவதாக இந்த விஷயம் திரித்து பார்க்கப் படுகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.