இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே.. "இவ்வளவு சலுகை எங்களுக்கு வேண்டாம்” - தேர்தல் ஆணையர்கள் திடீர் முடிவு!
டெல்லி: தேர்தல் ஆணையர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் சிறப்பு படிகளுக்கான வரிச் சலுகையை கைவிட தேர்தல் ஆணையர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய தலைமை தேர்தல் ஆணையராக கடந்த 15ஆம் தேதி ராஜீவ் குமார் பதவியேற்றுக் கொண்ட நிலையில், தேர்தல் ஆணையத்தின் முதல் கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், தேர்தல் ஆணையர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்பு சலுகைகளை மறுப்பது குறித்து ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்பட்டுள்ளது.
புதிய தலைமை தேர்தல் ஆணையர் நியமனம்.. முன்னாள் நிதித்துறை செயலாளர்.. யார் இந்த ராஜீவ் குமார்?
தலைமை தேர்தல் ஆணையர்
இந்திய தலைமை தேர்தல் ஆணையராக இருந்து வந்த சுஷீல் சந்திராவின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், தேர்தல் ஆணையராக இருந்த ராஜீவ் குமாரை புதிய தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து கடந்த 15-ஆம் தேதி ராஜீவ் குமார் தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றார். இந்தியாவின் 25-வது தலைமை தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ள ராஜீவ் குமார் தலைமையின் கீழ் 2024 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
ராஜீவ் குமார்
62 வயதான ராஜீவ் குமார், 1984 பேட்ச் ஜார்க்கண்ட் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி. மத்திய அரசின் பல்வேறு முக்கிய துறைகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். கடந்த 2020 பிப்ரவரியில் மத்திய அரசின் நிதித் துறை செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர், பொதுத்துறை நிறுவனங்களின் தேர்வு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். 2020 ஆகஸ்டில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார். தற்போது தலைமை தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்றுள்ளார்.
முதல் கூட்டம்
தலைமை தேர்தல் ஆணையராக ராஜீவ் குமார் பதவியேற்ற பின், இன்று முதன் முறையாக தேர்தல் ஆணையத்தின் கூட்டம் டெல்லியில் நடந்தது. இதில், தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் ஊக்கச் சலுகைகள், பயணப் படிகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஊக்கத்தொகை
தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர் ஆகியோருக்கு, விருந்தினர் உபசரிப்புக்காக மாதம் 34 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. இதற்கு, வருமான வரி சலுகையும் அளிக்கப்படுகிறது. புதிய தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு வரிச்சலுகை வேண்டாம் என முடிவெடுத்துள்ளனர்.
சிக்கன நடவடிக்கை
இந்தக் கூட்டத்தில், சிக்கன நடவடிக்கைகளில் ஒன்றாக, தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகைக்கு வரிச் சலுகை தேவையில்லை என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே ஆகியோர் தெரிவித்தனர். மேலும், ஆண்டுக்கு மூன்று முறை வழங்கப்படும் குடும்பச் சுற்றுலா பயணப் படியை ஒரு முறை மட்டுமே வழங்கினால் போதும் எனவும் அவர்கள் தெரிவித்தனர். தேர்தல் ஆணையர்களின் இந்த பரிந்துரைகள் மத்திய அரசின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.