"உடனே நீக்குங்க.." குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படம்.. ட்விட்டர், யூடியூபிற்கு பரபர உத்தரவு
டெல்லி: குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்டுள்ள ஆவணப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பான லிங்குகளை உடனடியாக நீக்குமாறு மத்திய அரசு சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
குஜராத்தில் கடந்த 2002இல் ஏற்பட்ட கலவரம் தொடர்பாகப் பிரபல சர்வதேச ஊடகமான பிபிசி சமீபத்தில் ஆவணப் படம் ஒன்றை வெளியிட்டிருந்தது. இரண்டு பாகங்களைக் கொண்ட 2002 குஜராத் கலவரத்தில் முதல் பாகம் இப்போது வெளியாகியுள்ளது.
பிபிசி நிறுவனத்தின் இந்த ஆவணப்படத்தில் பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்த கலவரத்தில் அவரை தொடர்புப்படுத்தியும் கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குஜராத் கலவர பிபிசி ஆவணப்படம்: பிரிட்டன் நாடாளுமன்றத்திலேயே மோடிக்கு ஆதரவாக முழங்கிய ரிஷி சுனக்!
பிபிசி ஆவணப்படம்
சர்வதேச அளவிலும் கூட இந்த ஆவணப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், நீண்ட கள ஆய்வுக்குப் பின்னரே இந்த ஆவணப்படத்தை எடுத்துள்ளதாக பிபிசி தரப்பில் தெரிவித்துள்ளது. அதேநேரம் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இதற்கும் பிரிட்டன் அரசுக்கும் தொடர்பில்லை என்றும் அதில் பிரதமர் மோடி குறித்து இடம் பெற்றுள்ள கருத்துகளைத் தான் ஏற்கவில்லை என்றும் கூறிவிட்டார். இந்த உலகின் எந்தப்பகுதியில் அநீதி நடந்தாலும் அதைத் தட்டிக் கேட்போம் என்றும் அதேநேரம் மரியாதைக்குரிய ஒரு தலைவரின் கண்ணியத்துக்கு இழுக்கு ஏற்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் கூறி இருந்தார்.
நீக்க உத்தரவு
இதனிடையே 2002 குஜராத் கலவரம் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி தொடர்பான பிபிசி ஆவணப்படத்தின் லிங்குகளை நீக்குமாறு ட்விட்டர் மற்றும் யூடியூப் நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. "இந்தியா: தி மோடி கோஷ்டீன்" என்ற தலைப்பில் வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்தின் ட்வீட்கள் மற்றும் யூடியூப் வீடியோக்கள் இனி இந்த தளங்களில் இருக்காது. இது தொடர்பாக இரு நிறுவனங்களுக்கும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் நேரடியாக உத்தரவிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
திரிணாமுல் எம்பி
இந்த ஆவணப்படம் தொடர்பான லிங்குகளை கொண்ட 50க்கும் மேற்பட்ட ட்வீட்களை நீக்குமாறு மத்திய அரசு ட்விட்டருக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட சில எதிர்க்கட்சி தலைவர்கள் இந்த ஆவணப்படத்தின் லிங்கை பகிர்ந்த நிலையில், அதுவும் நீக்கப்பட்டுள்ளது.. இது குறித்து அவர் கூறுகையில், "பிபிசி ஆவணப்படத்தின் எனது ட்வீட்டை நீக்கியுள்ளனர். அது பல லட்சம் பேர் பார்த்துள்ளனர். ஒரு மணி நேரம் ஓடும் அந்த பிபிசி ஆவணப்படம், பிரதமர் சிறுபான்மையினரை எப்படி வெறுக்கிறார் என்பதை அம்பலப்படுத்துகிறது" என்று சாடியுள்ளார்.
ட்விட்டர், யூடியூப்
தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021இன் கீழ் மத்திய அரசுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி லிங்குகளை நீக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து இரு நிறுவனங்களுமே ஆவணப்படம் தொடர்பான லிங்குகளை நீக்கி வருகிறது. மேலும், புதிதாக யாராவது இந்த ஆவணப்படத்தைப் பதிவேற்றம் செய்தாலோ அதன் லிங்குகளை பகிர்ந்தாலோ.. அதையும் நீக்குமாறு இந்த இரு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
பாஜக விமர்சனம்
இந்தியாவுக்கு எதிரான பிரசாரம் என்றும் இது காலனித்துவ மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றும் பாஜக இந்த ஆவணப்படத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளது. இந்த ஆவணப்படம் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரம் மற்றும் நம்பகத்தன்மையைக் குலைக்கும் வகையில் இருப்பதாகவும் இந்தியாவில் உள்ள சமூகங்களுக்கு இடையே பிளவுகளை விதைக்கும் ஒரு முயற்சி என்று சாடியுள்ளனர். தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் தவிர உள்துறை, வெளியுறவுத் துறை எனப் பல அமைச்சக அதிகாரிகள் இந்த ஆவணப்படத்தைக் கண்காணித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்
குஜராத் கலவரம்
குஜராத் கலவரத்தில் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. அதில் 2002 பிப்ரவரியில் குஜராத்தில் கலவரம் ஏற்பட்ட போது அப்போது முதல்வராக இருந்த பிரதமர் மோடி தவறு செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து இருந்தது. இப்போது அதற்கு மாறான கருத்துகளைக் கொண்டு பிபிசி ஆவணப்படம் வெளியாகியுள்ளதே சர்ச்சைக்குக் காரணமாக அமைந்துள்ளது.