உக்ரைனில் பதற்றமான சூழல்.. இந்தியர்கள் உடனடியாக வெளியேறுங்கள்.. மத்திய அரசு அறிவுறுத்தல்
டெல்லி: உக்ரைனில் போர் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் அந்த நாட்டை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உக்ரைனில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் அங்கு தங்கியுள்ள இந்தியர்கள், மாணவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும்.

இந்தியர்கள் தங்கியிருக்கும் இடம் குறித்த தகவல்களை உடனடியாக தூதரகத்தில் தெரிவிக்க வேண்டும். எப்போதும் தூதரகத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். அவசியமின்றி உக்ரைனுக்கு இந்தியர்கள் யாரும் செல்ல வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உக்ரைனில் இந்தியாவைச் சேர்ந்த 20 ஆயிரம் மாணவர்கள் உயர் கல்வி பயின்று வருகிறார்கள். ஏற்கெனவே கொரோனா பரவலால் ஊரடங்கு, தாய் நாடு திரும்பியது என மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது போர் பதற்றம் மாணவர்களுக்கு பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேட்டோ நாடுகளின் கூட்டமைப்பில் இணைய உக்ரைன் ஆர்வம் காட்டி வருவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எல்லையில் லட்சக்கணக்கான ராணுவத்தினரை குவித்துள்ளது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. போர் தொடுக்கும் நோக்கில் ரஷ்யா இவ்வாறு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆனால் அதை ரஷ்யா மறுக்கிறது.












Click it and Unblock the Notifications