மத்திய பாஜக அரசு எனக்கு பாதுகாப்பு தரலை... டெல்லி ஹைகோர்ட்டில் பாஜக சுப்பிரமணியன் சுவாமி முறையீடு
டெல்லி: மத்திய பாஜக அரசு டெல்லியில் உள்ள தமது வீட்டுக்கு போதுமான பாதுகாப்பு தரவில்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் பாஜகவை சேர்ந்த முன்னாள் எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி முறையிட்டுள்ளார்.
மத்தியில் பாஜக ஆட்சியில் அமர்ந்ததும் தமது ஜனதா கட்சியைக் கலைத்துவிட்டு பாஜகவில் இணைந்துவிட்டார். பின்னர் ராஜ்யசபா எம்.பி. பதவியையும் அனுபவித்தார்.
டெங்கு விழிப்புணர்வு..மழைக்காலம் காய்ச்சல் முகாம் தொடரும்..அமைச்சர் மா சுப்பிரமணியன் உறுதி!
சு.சுவாமி ஏமாற்றம்
மத்திய பாஜக ஆட்சியில் தமக்கு எப்படியாவது ஒரு அமைச்சர் பதவியை பெற்றுவிட போராடிப் பார்த்தார் சுப்பிரமணியன் சுவாமி. ஆனால் அதற்கான ஒரு சமிக்ஞையும் கிடைக்கவில்லை. மத்திய அமைச்சரவை மாற்றங்களின் போது தமக்கு பதவி கிடைக்கும் என வெளியிட்டப்பட்ட ட்விட்டர் பதிவுகளை பகிர்ந்து புளகாங்கிதம் அடைந்தும் பார்த்தார் சுவாமி. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
கடும் விமர்சனங்கள்
இதனால் மத்திய நிதி அமைச்சர்கள், ரிசர்வ் வங்கி ஆளுநர், பிரதமரின் பொருளாதார ஆலோசகர் என அனைவரையும் சகட்டுமேனிக்கு விமர்சித்தார் சுப்பிரமணியன் சுவாமி. அவரது இத்தகைய போக்கால் பாஜக மேலிடம் மெல்ல மெல்ல சு.சுவாமியை கழற்றிவிட்டது. அவருக்கு மீண்டும் ராஜ்யசபா பதவியும் தரவில்லை.
அரசு பங்களா விவகாரம்
இதனையடுத்து மமதா பானர்ஜி உள்ளிட்ட பாஜக எதிர்க்கட்சித் தலைவர்களுடன் நெருக்கம் காட்ட தொடங்கினார் சுப்பிரமணியன் சுவாமி. இந்த பின்னணியில் டெல்லியில் சுப்பிரமணியன் சுவாமி எம்.பி. என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவை காலி செய்ய உத்தரவிட்டது மத்திய அரசு. ஆனால் அரசு பங்களாவை காலி செய்ய முடியாது என தெரிவித்தார் சுப்பிரமணியன் சுவாமி. அத்துடன் இது தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார் சுவாமி. அதில், என் உயிருக்கு அச்சுறுத்தல் இப்போதும் உள்ளது; அதனால் அரசு பங்களாவிலேயே தங்க அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கில் மத்திய பாஜக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
புதிய முறையீடு
இருதரப்பு வாதங்களையும் கேட்ட டெல்லி உயர்நீதிமன்றம், அரசு பங்களாவை 6 வாரங்களுக்குள் சுப்பிரமணியன் சுவாமி காலி செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி தாக்கல் செய்த முறையீட்டு மனுவில், தமது புதிய டெல்லி பங்களாவில் மத்திய அரசு போதுமான பாதுகாப்பு தரவில்லை என கூறியிருக்கிறார். இம்மனு மீது வரும் 31-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது.