பெண்கள் என்ற வரையறையை மாற்றனும்.. திருநங்கைகளை அங்கீகரிக்கனும் -மக்களவையில் திமுக எம்பி வலியுறுத்தல்
டெல்லி: திருநர், திருநங்கையர், பால்புதுமையினரை அங்கீகரிக்க, 'பெண்கள்' என்கிற வரையறையை விரிவுப்படுத்தவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, "உலகளவில், திருநர்கள் மற்றும் பால்புதுமையினர் உள்ளிட்ட சமூக உறுப்பினர்கள் கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்பில் மிருகத்தனமான பாகுபாட்டிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்தியாவில், சமீபத்தில், பள்ளி மாணவியின் பாலியல் அடையாளத்தை கேள்வி கேட்டு கொடுமைப் படுத்தியதால், அவர் தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருகின்றன.

உரிமைகள் குறைப்பு
இதுபோன்ற கொலைகள் நிறுவன கொலை வழக்குகளாகப் பார்க்கப்பட வேண்டும். இந்த யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு, இத்தகைய வன்முறைப் பாகுபாடுகளுக்கு எதிராக ஒன்றிய அரசு சட்டங்களைக் கொண்டு வந்திருக்க வேண்டும். மாறாக, மேற்படி நபர்களின் உரிமைகளைக் குறைக்கும் 3 முக்கியமான சட்டங்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

சட்டப்பிரிவுகளை திரும்பப்பெறுக
வாடகைத்தாய் (ஒழுங்குமுறை) சட்டம், 2021, உதவி இனப்பெருக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த 3 சட்டங்களில், மேற்படி சமூகத்தினருக்கு எதிரான பிரிவுகளைத் திரும்பப் பெறுமாறு நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். தற்போது வாடகைத் தாய்க்கு ஹெட்டரோ-செக்சுவல் தம்பதிகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்.

குழந்தை பெறும் உரிமை
இந்தச் சட்டத்தின்கீழ், குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை மேற்கண்ட சமூகத்தினர் மற்றும் தனிநபர்கள் அல்லது தம்பதிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று நான் அரசாங்கத்தை வலியுறுத்துகிறேன். மேலும், உதவி இனப்பெருக்கத் தொழில்நுட்ப (ஒழுங்குமுறை) சட்டம், 2021ன் கீழ், மேற்படி சமூகத்தினர் மற்றும் தம்பதிகள் ஏ.ஆர்.டி. சிகிச்சையைப் பெறுவதற்கு தகுதியுடையவர்களாக மாற்றுமாறும் அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.

பெண்கள் என்ற வரையறை
மேலும், கருக்கலைப்புக்கான அணுகல் தேவைப்படக்கூடிய திருநர்கள் மற்றும் பால்புதுமையினர்களை உள்ளடக்குவதற்கு "பெண்கள்" என்ற வரையறையை உடனடியாக விரிவுபடுத்த வேண்டும் என்றும், மேற்படி சமூகத்தினரில் மூத்த நபர்களுக்கான பராமரிப்பு, பொது இடங்களில் பிரதிநிதித்துவம் போன்றவற்றில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு வழங்கவும் கேட்டுக் கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு உல்லார்.












Click it and Unblock the Notifications