மோடி அரசில் ஜனநாயகம், பொருளாதாரம், பாதுகாப்பு அத்தனையும் நாசம்.. காங். செயற்குழுவில் கண்டன தீர்மானம்
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் ஜனநாயகம், பொருளாதாரம், பாதுகாப்பு என அத்தனையும் சீரழிந்துபோய்விட்டதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழுவில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நேற்று நடைபெற்றது. சுமார் 5 மணிநேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15981 பேருக்கு கொரோனா.. 146 பேர் பலி.. 19,785 பேர் டிஸ்சார்ஜ்
மேலும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை முதல் அகில இந்திய தலைவர் தேர்தல் வரை நடத்துவது தொடர்பாகவும் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் படுகொலைகள்- மோடி மவுனம்
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசுக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டம் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், 10 மாதங்களாக டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் மத்திய அரசு விவசாயிகளுடனான பேச்சுவார்த்தை நடத்துவதில் ஆணவப் போக்கை வெளிப்படுத்துகிறது. காவல்துறை மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் குண்டர் கும்பல் போராடும் விவசாயிகள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுகின்றன. விவசாயிகளின் போராட்ட குரலை ஒடுக்கும் வகையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இதற்கு நல்ல உதாரணம். இந்த படுகொலைகளுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவிக்கவில்லை; இந்த படுகொலைகளுக்கு காரணமான மத்திய இணை அமைச்சரையும் பதவி நீக்கம் செய்யவில்லை. இது நாட்டின் மனசாட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆதரவுடன் வன்முறைகள்
மேலும் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீது அரசுகள் ஆதரவுடன் வன்முறைகள் நிகழ்த்தப்படுகின்றன. அவர்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இத்தகைய சமூக விரோத கும்பல்களுக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடரும்; மக்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம் என்கிறது காங்கிரஸ் செயற்குழுவின் மற்றொரு தீர்மானம்.
ஜனநாயக அமைப்புகள் சீரழிவு
அதேபோல், ஜனநாயக அமைப்புகளை சீர்குலைக்கும் மோடி அரசின் நடவடிக்கை வேதனைக்குரியது; அவமானகரமானது. நாட்டின் நாடாளுமன்றத்தை மோடி அரசு புறந்தள்ளுகிறது. தேர்தல் ஜனநாயகத்துக்கு புகழ்பெற்ற இந்த தேசம் இனியும் ஜனநாயக கருத முடியாத அளவுக்கு நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. நீதித்துறை, தீர்ப்பாயங்களின் காலி இடங்களை நிரப்ப மறுத்து அவற்றை பலவீனமாக்க முயற்சிக்கிறது மோடி அரசு என்றும் காங்கிரஸ் செயற்குழு தீர்மானம் சாடி உள்ளது.
பொருளாதாரம் சரிவு
நாட்டின் பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் சரிந்து வருவது பெரும் கவலைக்குரியது. 2020-21-ம் ஆண்டில் பொருளாதாரம் மிக மோசமாக சரிந்த போதும் கூட பொருளாதார மீட்சி என பேசுகிறது மோடி அரசு. பொருளாதார வீழ்ச்சி, கொரோனா பரவலால் வேலை இழப்பு அதிகரித்துள்ளது. மூடப்பட்ட சிறு- குறு தொழில்கள் மீண்டும் திறக்கப்பட முடியாத நிலையில் உள்ளன. கடந்த 70 ஆண்டுகளாக படிப்படியாக உருவாக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களை மோடி அரசு மும்முரமாக விற்பனை செய்து வருகிறது என்கிறது காங்கிரஸ் செயற்குழு தீர்மானம்.
பாதுகாப்பு அச்சுறுத்தல்
அத்துடன், பாதுகாப்பு படையினர் மற்றும் பொதுமக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உயிரிழப்புகள் தொடருகின்றன. ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கி தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அஸ்ஸாம், நாகாலாந்து, மிசோரம் மாநிலங்களின் பாதுகாப்புக்கு மிகப் பெரும் அச்சுறுத்தல் நிலவுகிறது. மோடி அரசின் கடும்போக்கால் நாகா அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பெரும் பின்னடவு ஏற்பட்டுள்ளது எனவும் கடுமையாக விமர்சித்துள்ளன காங்கிரஸ் கட்சியின் செயற்குழு தீர்மானங்கள். மேலும் ஜனநாயகம், பொருளாதாரம், பாதுகாப்பு என அனைத்தையும் நாசமாக்கி இருக்கும் மோடி அரசுக்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளது காங்கிரஸ் செயற்குழு தீர்மானங்கள்.