ம.பி.யில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காவிட்டால், 'பிளான் பி'.. பாஜக, காங்கிரஸ் அதிரடி திட்டம்
டெல்லி: தேர்தல் முடிவுகளில் தொங்கு சட்டசபை அமையும் சூழ்நிலை வந்தால் அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முடிவு செய்துள்ளன.
மத்திய பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் அல்லது பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஏறத்தாழ ஒரே மாதிரி எண்ணிக்கையில் வெல்லக் கூடும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
எனவே அந்த மாநிலத்தில்தான் இவ்விரு கட்சிகளும் பிளான் பி-யை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுயேச்சைகள்
அது என்ன பிளான் பி? தங்கள் கட்சியில் இருந்து கோபித்துக்கொண்டு சென்று சுயேச்சையாக களமிறங்கிய வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் அவர்களை தங்களுக்கே ஆட்சியமைக்க ஆதரவு தெரிவிக்க வைப்பதுதான் பிளான் பி. அத்தனை பேர் கோபித்துக் கொண்டு போனார்களா என்ற கேள்வி அடுத்து எழும். ஆம் என்பதுதான் கள நிலவரம்.
மத்திய பிரதேசம்
மத்திய பிரதேசத்தில் மட்டும் சுமார் ஒரு டஜன் சுயேச்சை வேட்பாளர்கள் பாஜகவில் டிக்கெட் கிடைக்கவில்லை என கடைசி நேரத்தில் முறுக்கிக்கொண்டு சென்றவர்கள்தான். அதில் குறைந்தபட்சம் 4 பேராவது வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளதாம். எனவே அவர்களுடன் இப்போதே பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டனர். அமைச்சர் பதவி உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் இதில் இடம் பெற்றுள்ளதாம்.
சுயேச்சைகள்
இதேபோலத்தான் காங்கிரசும், தனது கட்சியிலிருந்து பிரிந்து சென்று சுயேச்சையாக நிற்பவர்களை வலைவீசி பிடித்து வருகிறது. இரு கட்சிகளுமே கைக்கு அருகே வரும் ஆட்சியை ஒன்றிரெண்டு சீட்டுகளால் கை நழுவ விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளன என்பதால் மத்திய பிரதேச தேர்தல் களத்தில் இப்போதே அனல் பறக்கிறது.
பெரும்பான்மை பலம்
மத்திய பிரதேச சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க குறைந்தபட்சம் 115 எம்எல்ஏக்கள் தேவை. இதனிடையே, பாஜக தனித்தே 130-135 தொகுதிகளை வெல்ல வாய்ப்புள்ளதாக அவர்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட சர்வே முடிவுகள் சொல்கிறதாம். இருந்தாலும், நம்பிக்கையின்மையால், சுயேச்சைகளுக்கு வலைவீசப்படுகிறது.
சுயேச்சை கோபம்
2 தொகுதிகளில், சுயேச்சையாக போட்டியிட்ட பாஜகவை சேர்ந்த முன்னாள் தலைவரான ராமகிருஷ்ண குசுமாரியா கூறுகையில், பாஜக அரசுக்கு ஆதரவு அளிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. நான் ஒரு சுயேச்சை எம்எல்ஏவாகத்தான் செயல்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.
பிற கட்சிகள்
இதனிடையே காங்கிரஸ் கட்சி இன்னும் ஒருபடி மேலே போய் சுயேச்சைகள் மட்டுமின்றி, சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறது. அந்த கட்சி வேட்பாளர்களும் மத்திய பிரதேச தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.