மத்திய அரசைக் கண்டித்து... 30-ம் தேதி காங்கிரஸ் பிரமாண்ட பேரணி
டெல்லி: காங்கிரஸ் சார்பில் மத்திய அரசைக் கண்டித்து வரும் 30-ம் தேதி டெல்லியில் பிரமாண்ட பேரணி நடத்தப்பட உள்ளது.
அந்தப் பேரணியில் இந்தியா முழுவதும் இருந்து காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி பிரமுகர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
''பாரதத்தை காப்பாற்றுங்கள்'' என்ற முழக்கத்தை முன்வைத்து நடத்தப்படவுள்ள இந்தப் பேரணி மூலம் தேசிய அளவிலான கவனத்தை ஈர்க்க திட்டமிட்டுள்ளது காங்கிரஸ் தலைமை.
டெல்லியில் 30-ம் தேதி
மத்திய பாஜக அரசின் தவறான நடவடிக்கைகளால் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை அதிகரித்துள்ளதாகவும் கூறி டெல்லியில் வரும் 30-ம் தேதி பிரமாண்ட பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளது காங்கிரஸ்.
அரசின் தோல்வி
மத்திய பாஜக அரசின் நிர்வாக தோல்விகளை மக்களுக்கு விளக்கும் வகையில் கடந்த 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நாடு முழுவதும் மாவட்ட, வட்டார அளவில் காங்கிரஸ் சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அந்த தொடர் போராட்டங்களின் நிறைவு பகுதியாக டெல்லியில் பிரமாண்ட பேரணி நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றம்
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்க கூடிய சூழலில் காங்கிரஸ் நடத்தவுள்ள இந்த பேரணி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதில், பங்கேற்க நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாரதத்தை காப்பாற்றுங்கள்
வரும் சனிக்கிழமை (30-ம்) அன்று ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் நடத்தும் பேரணியில் அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளும், எம்.பி, எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க இருக்கின்றனர். பேரணிக்கு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி தலைமையேற்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.