ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா- கூட்டுக் குழு பரிசீலனைக்கு அனுப்புவதுதான் பிரதமரின் விருப்பம்: அமித்ஷா
டெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாட்டின் கூட்டாட்சி அமைப்புக்கு எதிரானது; அரசியல் சாசனத்தின் மீதான தாக்குதல்; மாநில அரசுகளின் பதவிக் காலத்தை குறைக்க அதிகாரம் எதுவும் இல்லை எனவும் காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக உள்ளிட்ட கட்சிகள் லோக்சபாவில் இந்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து உடனே வாபஸ் பெற வேண்டும் என வலியுறுத்தின.
லோக்சபாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை மத்திய அமைச்சர் அர்ஜூன் மேக்வால் தாக்கல் செய்தார். இந்த மசோதாவுக்கு அறிமுக நிலையிலேயே அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனாலும் லோக்சபாவில் இந்த மசோதா தாக்கலானது.

காங்கிரஸ் எம்பி மணீஷ் திவாரி: ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நாட்டின் அடிப்படை அரசியல் சாசன கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது. இதனை உடனே வாபஸ் பெற வேண்டும்.
சமாஜ்வாதி எம்பி தர்மேந்திர யாதவ்: சர்வாதிகாரத்தை அமல்படுத்த முயற்சிக்கிறது இந்த மசோதா. இந்தியாவின் பன்முகத் தன்மை, கூட்டாட்சியை சீர்குலைக்கிறது இந்த மசோதா என்பதால் இதனை எதிர்க்கிறோம்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி: அரசியல் சாசனத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே கேள்விக்குள்ளாக்குகிறது இந்த மசோதா. மாநிலங்களின் சட்டசபை பதவி காலத்தை குறைக்கும் அதிகாரம் கிடையாது.
திமுக டிஆர் பாலு எம்பி: ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. லோக்சபாவில் 3-ல் 2 பங்கு பெரும்பான்மை இருந்தால்தான் இந்த மசோதாவை கொண்டுவர வேண்டும். பெரும்பான்மையே இல்லாத நிலையில் ஏன் இந்த மசோதாவை தாக்கல் செய்ய வேண்டும்?
மஜ்லிஸ் கட்சி எம்பி ஓவைசி: மாநிலங்கள் என்ற கட்டமைப்பையே அழித்துவிடக் கூடியது இந்த மசோதா. அரசியல் சாசனத்தின் 14-வது பிரிவுக்கு எதிரானது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா: ஒரே நாடு ஒரே மசோதாவை நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்பதுதான் பிரதமர் நரேந்திர மோடியின் விருப்பம்; எதிர்க்கட்சிகளின் விருப்பமும் அதுதான்.












Click it and Unblock the Notifications