"வெட்டிப் பேச்சு உதவாது.." கபில் சிபலை விளாசிய ஆதிர் ரஞ்சன்.. காங்கிரஸ் உட்கட்சி மோதல் முற்றுகிறது
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைமையை விமர்சனம் செய்த முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த தலைவருமான கபில் சிபலை கடுமையாக கண்டித்துள்ளார் அக்கட்சியின் லோக்சபா குழுத் தலைவரான ஆதி ரஞ்சன் சவுத்ரி.
சமீபத்தில் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கபில்சிபல், பீகார் சட்டசபை தேர்தல் மற்றும் 11 மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் காங்கிரஸ் மோசமாக தோற்றதற்கு தலைவர்கள் போதிய ஆலோசனை நடத்தாதது காரணம் என்று குற்றம் சாட்டி இருந்தார்.
காங்கிரஸ் கட்சி வீழ்ச்சி அடைந்து விட்டது என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், தோல்விக்கான காரணங்களை ஆய்வு செய்ய காலகட்டம் முடிந்து விட்டதாகவும் கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தார்.
பேச்சு உதவாது
இந்த நிலையில்தான் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ஒரு செய்தி நிறுவனத்திடம் அளித்துள்ள பேட்டியில், கபில்சிபலை விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில், கபில் சிபலின் வெறும் பேச்சு எதையும் சாதிக்காது. தனது பேட்டியில் கபில் சிபல் விமர்சனம் செய்து இருக்க கூடாது. நாடு முழுக்க உள்ள காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உணர்வுகளை அவரது பேட்டி புண்படுத்தி விட்டது.
பிரச்சாரம் செஞ்சீங்களா
பீகார், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களின்போது பிரச்சாரக் கூட்டத்தில் கபில்சிபலை பார்க்கவே முடியவில்லை. பீகார் அல்லது மத்திய பிரதேசத்திற்கு கபில்சிபல் சென்றிருந்தால், காங்கிரசுக்கு அவர் பங்களித்து இருந்தால் கட்சியை மேலும் பலப்படுத்தி இருக்க முடியும். ஆனால் எதையுமே செய்யாமல் வெறும் பேச்சு மட்டும் எதையும் சாதிக்காது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி விமர்சனம் செய்துள்ளார். அடுத்த ஆண்டு தேர்தலை சந்திக்க உள்ள மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி என்பது குறிப்பிடத்தக்கது.
சல்மான் குர்ஷித்
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித், கபில் சிபலை மறைமுகமாக விமர்சனம் செய்திருந்தார். ஊடகத்தில் கட்சித் தலைமையை விமர்சித்து வரும் கட்சியின் நிர்வாகிகள் சந்தேகப் பேர்வழிகள். திடீர் பதற்ற நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று தனது பங்குக்கு விளாசி இருந்தார் சல்மான் குர்ஷித்.
பீகார் சட்டசபை தேர்தல்
பீகார் சட்டசபை தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதாதள கூட்டணியில் பங்கு வகித்த காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட நான்கில் ஒரு பங்கு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால் அந்த கூட்டணி ஆட்சிக்கு வரமுடியாமல் பெரும் முட்டுக்கட்டையாக மாறியது காங்கிரஸ் என்பது நினைவிருக்கலாம்.