தமிழகம் மீது ஸ்பெஷல் அக்கறை.. முக்கிய கோரிக்கைகளுக்கு எல்லாம் கிரீன் சிக்னல் கொடுத்த ராகுல்!
காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video
டெல்லி: காங்கிரஸ் கட்சி இன்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழகத்திற்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.
தென்னிந்திய மக்கள் மோடியால் தனித்துவிடப்பட்டதாக உணர்கிறேன்; அவர்களுடன் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே தென்னிந்தியாவில் போட்டியிடுகிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில்தான் அவர் தமிழகத்தின் பல கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து இருக்கிறார். தமிழகத்தில் முக்கிய பிரச்சனையாக இருக்கும் பல கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக காங்கிரஸ் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மாநில பட்டியல்
காங்கிரஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்று, கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற போவதாக அறிவித்து இருக்கிறது. அதாவது பள்ளி கல்வி மாநில பட்டியலிலும், உயர் கல்வி மத்திய பட்டியலிலும் இருக்கும் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இது தமிழகத்தின் பல நாள் கோரிக்கை ஆகும்.
காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையின் 5 முக்கிய அம்சங்கள் இவைதான்!
நீட் பிரச்சனை
ராகுல் காந்தி வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. நீட் தேர்வை எதிர்க்கும் மாநிலங்களில் அந்த முறை ரத்து செய்யப்படும். தமிழகத்திலும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும், என்றுள்ளார். இது தமிழகத்தின் மிக முக்கியமான கோரிக்கை ஆகும்.
இந்தியாவின் மாபெரும் தேர்தல் திருவிழா.. பங்கேற்க மறவாதீர்கள்
ஜிஎஸ்டி பிரச்சனை
ஜிஎஸ்டி மாற்றம் செய்யப்படும். ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்படும். பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரப்படும் என்று கூறியுள்ளார், இது தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர்கள் அதிகமாக வைத்த கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்
அதேபோல் விவசாயிகளுக்கான தனி பட்ஜெட் போடப்படும் என்று கூறியுள்ளார். இந்தியாவில் முதன்முதலாக திமுகதான் இந்த அறிவிப்பை வெளியிட்டது. தற்போது தனது கூட்டணி கட்சியான திமுகவின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டு அதே அறிவிப்பை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம்
அதேபோல் திமுக வெளியிட்ட இன்னொரு அறிவிப்பான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என்று காங்கிரசும் தற்போது கூறியுள்ளது. இது பல வருடங்களாக புதுச்சேரி மக்களின் கோரிக்கை ஆகும். இதுகுறித்தும் கவனம் செலுத்தப்பட்டு இருக்கிறது.
மீனவர் பிரச்சனை
மிக முக்கியமாக மீனவர் பிரச்சனை சரிசெய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறி உள்ளது. முக்கியமாக இலங்கையுடனான மீனவர் பிரச்சனை சரி செய்யப்படும். மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இது தமிழர்களின் பல ஆண்டு கோரிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாய கடன் அறிக்கை
அதேபோல் தமிழக விவசாயிகளின் இன்னொரு கோரிக்கையான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற கோரிக்கையும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டு இருக்கிறது. நாடு முழுக்க விவசாய கடன்களை தள்ளுபடி செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்து இருக்கிறது.