ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்ற காவல்துறை.. இறுதிவரை முழக்கம்.. பரபரக்கும் காங். போராட்டம்..!
டெல்லி: ராகுல் காந்தியிடம் 3ஆவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை, காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்துள்ளனர்.
நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் அமலாக்கத்துறை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியிடம் தொடர்ந்து 3ஆவது நாளாக விசாரணை நடத்திவருகிறது. இதற்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும், ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகம் புறப்படும் போதும், காங்கிரஸ் கட்சி தொண்டர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திக்குமுக்காடி வருகின்றனர்.
அமலாக்கத்துறை முன்பு ராகுல்.. 2வது நாளில் 10 மணி நேர விசாரணை நிறைவு.. மீண்டும் நாளை ஆஜராக சம்மன்!
காங். போராட்டத்தில்...
கடந்த இரண்டு நாட்களாக செய்யப்பட்டு வரும் போராட்டங்களில் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தூக்கிச் செல்லப்பட்ட வீடியோ காட்சிகள், மூத்த தலைவர் பா.சிதம்பரத்தின் கையில் ஏற்பட்ட காயம் உள்ளிட்ட நிகழ்வுகள் அக்கட்சி தொண்டர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மீதான இந்த நடவடிக்கை, ஆளும் பாஜக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
3ம் நாளாக விசாரணை
2ம் நாளில் ராகுல் காந்தியிடம் சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக அமலாக்கத்துறையின் விசாரணை நடைபெற்றது. காலையில் சுமார் நான்கு மணி நேர விசாரணைக்கு பிறகு, மதியம் 3:30 மணியளவில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து மாலை 4:30 மணியளவில் விசாரணைக்கு ராகுல் ஆஜரானபோது மத்திய அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அவரது சகோதரி பிரியங்காவும் வந்திருந்தார். விசாரணை முடிந்து நேற்றிரவு 11.30 மணியளவில் அமலாக்க இயக்குநரக அலுவலகத்தில் இருந்து ராகுல் புறப்பட்டார்.
மகளிர் காங். போராட்டம்
இன்று மூன்றாவது நாளாக அமலாக்கத்துறை தரப்பில் ராகுல் காந்தியிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி மகளிர் அணி தரப்பில் காங்கிரஸ் அலுவலகம் முன் போராட்டம் நடைபெற்றது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் காவல்துறையினர் அவர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
ஜோதிமணி கைது
இதனிடையே அமலாக்கத்துறை அலுவலகத்தை காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ஜோதி மணி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் ஏராளமானோர் அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர், ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது சென்றனர். அவர்கள் பேருந்தில் ஏற்றப்பட்ட நிலையிலும், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டன.இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.