ஒடிஷா ரயில் விபத்து- பிரதமர் மோடிக்கு சரமாரியாக கேள்விகளை கேட்டு 4 பக்க கடிதம் அனுப்பிய கார்கே!
டெல்லி: 275 பேரை பலி கொண்ட ஒடிஷா ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியிடம் சரமாரியான கேள்விகளை கேட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடிதம் அனுப்பி உள்ளார்.
சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை ஒடிஷாவின் பாலசோர் அருகே விபத்துக்குள்ளாகின. இதில் 275 பேர் மரணம் அடைந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெரும்பாலானோர் உடல்கள் அடையாளம் காணப்படாமல் இருக்கிறது. 900 பேர் வரை காயமடைந்தனர்.

இந்த விபத்துக்கான மூல காரணம் கண்டறியப்பட்டுவிட்டது என முதலிலும் பின்னர் சிபிஐ விசாரணை நடைபெறும் என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் நாசவேலை காரணமா என விசாரிப்போம் எனவும் மத்திய அரசு தெரிவித்தது. இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடிக்கு இன்று 4 பக்க கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் 11 பிரிவுகளின் கீழ் பல்வேறு கேள்விகளை பிரதமர் மோடியிடம் மல்லிகார்ஜூன கார்கே முன்வைத்துள்ளார்.
பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் மல்லிகார்ஜூன கார்கே முன்வைத்த கேள்விகள் சில:

9 ஆண்டுகளாக 3 லட்சம் காலிப் பணி இடங்களை நிரப்பாதது ஏன்?
18 லட்சம் ரயில்வே ஊழியர்கள் எண்ணிக்கையை 12 லட்சமாக குறைத்தது ஏன்?
3.8 லட்சம் ஊழியர்களை இன்னமும் ஒப்ப்ந்த பணியாளர்களாகவே வைத்திருப்பது ஏன்?
பணிநேரத்துக்கு அதிகமாக பணிபுரியவேண்டும் என ஊழியர்களை கட்டாயப்படுத்துவது ஏன்?
ரயில் ஓட்டுநர் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் வைத்திருப்பது ஏன்?
தென்மேற்கு மண்டல அதிகாரி சிக்னல் கட்டமைப்பு கோளாறு தொடர்பாக எச்சரிக்கை விடுத்தும் அலட்சியம் ஏன்?
ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தை பலப்படுத்தாமல் இருப்பது ஏன்?
ரயில்வே பாதுகாப்பு ஆணையத்துக்கு தன்னாட்சி வழங்காமல் இருப்பது ஏன்?
ரயில்வே ஆணையத்தின் பாதுகாப்பு பரிந்துரைகளை அலட்சியப்படுத்துவது ஏன்?
இந்திய தலைமை கணக்கு அதிகாரி சுட்டிக் காட்டிய பின்னும் தண்டவாளம் சீரமைப்பு இல்லை ஏன்?
காங். அரசு அறிவித்த ரயில் மோதல் தடுப்பு திட்டத்தை ஏன் மோடி அரசு செயல்படுத்தவில்லை?
கான்பூர் ரயில் விபத்து சதி என கூறப்பட்டு என்.ஐ.ஏ. விசாரித்தும் கைவிடப்பட்டது
கான்பூர் ரயில் விபத்து போல ஒடிஷா ரயில் விபத்து விசாரணையை சிபிஐ நடத்துமா?
ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணமானவர்களை தண்டிக்காமல் திசை திருப்புவது ஏன்?
ஒடிஷா ரயில் விபத்துக்கு மூல காரணம் கண்டுபிடித்துவிட்டோம் என கூறிய பின் சிபிஐ விசாரணை ஏன்?
சிபிஐயில் ரயில்வே சார்ந்த வல்லுநர்கள் இல்லாத போது எப்படி விசாரணை நடை பெறும்?
தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான நிதியை 79% குறைத்தது ஏன்?
தண்டவாளங்களை புதுப்பிப்பதற்கான ரூ20,000 கோடி நிதி என்னதான் ஆயிற்று?
கவாச் திட்டத்தை 4% வழித்தடங்களில் மட்டுமே அமல்படுத்தி இருப்பது ஏன்?
ஒடிஷா ரயில் விபத்து குறித்து சிபிஐ விசாரணை என்பது திசை திருப்புவதற்காகவா?
ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் நோக்கத்தில்தான் தனி ரயில்வே பட்ஜெட் முறையையே கைவிட்டதா மத்திய பாஜக அரசு?












Click it and Unblock the Notifications