மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமையில் வராது..உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வைத்த முக்கிய ‘பாயிண்ட்’
டெல்லி: மத சுதந்திரம் என்ற பெயரில் மாற்று மதத்தினரை மதமாற்றம் செய்வது அடிப்படை உரிமையில் வராது என்றும் கட்டாய மதமாற்றத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கட்டாய மதமாற்றம் விவகாரம் அவ்வப்போது எழுந்து வருகிறது. குறிப்பாக மத்தியில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு இது குறித்த விவாதங்கள் அதிகரித்துள்ளன.
கட்டாய மதமாற்றத்திற்கு எதிராக பல மாநிலங்களில் சட்டம் இயற்றப்பட்டுள்ளன. மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், அரியானா, கர்நாடகா உள்ளிட்ட பாஜக ஆட்சியில் உள்ள மாநிலங்கள் இதற்கான சட்டங்களை இயற்றியுள்ளன.
கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி
மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக 10 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கும் வகை செய்யும் வகையில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும் மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உபாத்யாய், கட்டாய மதமாற்றத்தை தடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவில், நாட்டின் பல பகுதிகளிலும் கட்டாய மதமாற்றம் நடப்பதாகவும் தூண்டுதல், ஏமாற்றுதல், அச்சுறுத்தல், பணம் , பரிசுபொருட்களை கொடுத்து மதமாற்றம் நடக்கிறது.
தீவிரமான பிரச்சினை
இதனை தடுக்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள் எம்.ஆர் ஷா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணை நடைபெற்ற போது, கட்டாய மதமாற்றம் மிகவும் தீவிரமான பிரச்சினை என்றும் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறி வழக்கின் விசாரணையை ஒத்திவை வைத்தனர்.
அடிப்படை உரிமையில் வராது
இதன்படி இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:- மதமாற்றம் என்பது மத சுதந்திரத்தின் கீழ் அடிப்படை உரிமையில் வராது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள் தான் அதிகம் பாதிக்கபடுபவர்களாக இருக்கின்றனர்.
உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்
எனவே இவர்களின் உரிமைகளை பாதுகாக்க கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டம் அவசியம் ஆகிறது. ஒடிசா, மத்திய பிரதேசம், குஜராத், ஜார்க்கண்ட், உத்தரகாண்ட், கர்நடகா, அரியானா ஆகிய மாநிலங்களில் கட்டாய மதமாற்ற தடுப்பு சட்டம் அமலில் இருக்கிறது. கட்டாய மதமாற்றத்தை தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதமாறுவதை எதிர்க்கவில்லை.
இதையடுத்து, நீதிபதிகள் கூறும் போது, ''மதமாறுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. கட்டாய மதமாற்றம் என்பதைத்தான் எதிர்க்கிறோம். இந்த விவகாரத்தில் மாநில அரசுகளிடம் உரிய தகவல்கள் பெற்று விரிவான பிரமாணப்பத்திரைத்தை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் டிசம்பர் 5 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.