பிரிட்டனில் இருந்து இந்தியா வந்த 20 பேருக்கு கொரோனா - புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளிட்ட அரசு
இங்கிலாந்தில் இருந்து கடந்த ஒரு மாதத்தில் இந்தியாவிற்கு வந்தவர்களை கண்காணிக்கவும், கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: இங்கிலாந்தில் இருந்து இந்தியா வந்துள்ள 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு கொரோனா உறுதியானால் அவர்களின் மாதிரிகளை புனேவிற்கு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் தற்போது புதிய பரிணாமத்தில் பரவும் கொரோனா வைரஸ் இளையவர்களையே அதிகம் பாதிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது. ஐரோப்பிய நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் அறிக்கையை சுட்டிக்காட்டி மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு உள்ளது.
இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது, சாதாரண கொரோனாவை விட 70 சதவீதம் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிற்குள் இந்த புதிய கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நேற்று நள்ளிரவு முதல் 31ஆம் தேதிவரை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களாக இங்கிலாந்தில் இருந்து நேரடி விமானத்தில் டெல்லி வந்த பயணிகளில் 6 பேர், கொல்கத்தா வந்தவர்களில் 2 பேர், ஆமதாபாத் வந்த 4 பேர், அமிஸ்தசரஸ் வந்த 8 பேர் என இதுவரை மொத்தம் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் அனைவரையும் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.
சளி மாதிரிகள் புனேவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே அது புதிய வகை கொரோனா தொற்றா இல்லையா என்பது தெரியவரும். இதனிடையே கடந்த ஒரு மாதத்தில் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
நேற்று முன்தினமும், நேற்றும் இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு விமான நிலையத்திலேயே கட்டாயமாக கொரோனா பரிசோதனை நடத்தவும் உத்தரவிட்டுள்ள மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
பீதி கிளப்பும் புதுவகை வைரஸ்: இங்கிலாந்து உடனான அனைத்து விமான சேவைகளையும் ரத்து செய்த இந்தியா
நவம்பர் 25 முதல் டிசம்பர் 8 வரை இங்கிலாந்து நாட்டில் இருந்து இந்தியா வந்தவர்களை கண்காணிக்க வேண்டும். அவர்களுக்கு கொரோனா உறுதியானால் அவர்களின் மாதிரிகளை புனேவிற்கு அனுப்ப வேண்டும். கொரோனா சோதனையில் நெகட்டிவ் என வந்தாலும் சுய தனிமை அவசியம். வருவோர் தங்களை தாங்களே சுய தனிமைப்படுத்திக் கொள்வது மிக அவசியம்.
இங்கிலாந்தில் இருந்து வந்தவர்களுக்கு 14 வது நாளில் கொரோனா உறுதியானாலும், பரிசோதனையை தொடர வேண்டும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.