டெல்லி, மும்பையில் வேகமாக பரவும் கொரோனா.. பலியும் அதிகரிப்பு.. மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை!
டெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் நிதி தலைநகர் மும்பையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் பலி எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டு கால் பதித்த கொரோனா எனும் கொடிய வைரஸ் பெருந்தொற்று இன்றும் மக்கள் மத்தியில் பீதியை அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.
அதுவும் உருமாறிய கொரோனா, கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை என கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு தான் இருக்கிறது.

மீண்டும் பரவும் கொரோனா
என்ன தான் தடுப்பூசி பெருமளவில் போடப்பட்டாலும் தற்போது சில நாட்களாக கொரோனா வைரசானது மீண்டும் நாட்டில் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. இதேபோல் தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, கேரளா போன்ற மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பு நடவடிக்கையை தீவிரமாக மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியிருந்தது.

10 நாட்களில் 40 பேர்
குறிப்பாக பண்டிகை காலங்கள் வர உள்ளதால், மாநில எல்லைகளில், பஸ் நிலையங்கள், ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் பரிசோதனைகளை துரிதப்படுத்துமாறு கடிதம் அனுப்பியது. இதற்கிடையே தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்து இருப்பது மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தும் வையில் உள்ளது. கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆக பதிவாகியுள்ளது சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளதோடு, மக்களுக்கும் பீதியை கொடுத்துள்ளது.

மும்மடங்கு அதிகரித்தது பலி எண்ணிக்கை
கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி கொரோனா பாதிப்புக்கு பலியானவர்கள் எண்ணிக்கை இரண்டு ஆக பதிவானது. 2 ஆம் தேதி மூன்று பேரும், 3 ஆம் தேதி ஐந்து பேரும், 4 ஆம் தேதி நான்கு பேரும், 5 ஆம் தேதி இரண்டு பேரும், 6 ஆம் தேதி ஒருவரும், 7 ஆம் தேதி இரண்டு பேரும், 8 ஆம் தேதி ஆறு பேரும், 9 ஆம் தேதி ஏழு பேரும், 10 ஆம் தேதி எட்டு பேரும் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தது கவலை அளிப்பதாக அமைந்துள்ளது. ஜூலை மாத இறுதியில் கடைசி 10 நாட்களில் 14 பேர் உயிரிழந்திருந்த நிலையில், தற்போது அடுத்த 10 நாட்களில் பலி எண்ணிக்கை மும்மடங்கு அதிகரித்துள்ளது பெரும் எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

இணை நோய்கள் காரணமாக
குறிப்பாக நேற்று மட்டும் டெல்லியில் கொரோனா பாதிப்பால் எட்டு பேர் பலியாகி இருந்தனர். கடந்த 180 நாட்களில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை இதுவாகும். டெல்லியில் இதுவரை கொரோனாவுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 26 ஆயிரத்து 351 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஏற்றம் கண்டு வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்வதும் குறிப்பிடத்தக்கது. எனினும் இது குறித்து மருத்துவ நிபுணர்கள் சொல்லும் போது, இணை நோய்கள் மற்றும் புற்றுநோய், காசநோய் பாதிப்புடன் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பவர்கள் எண்ணிக்கையும் இதில் அடங்கும் என்று தெரிவித்துள்ளனர்.

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்
பிற நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தற்செயலாக கொரோனா பாதிப்பும் கண்டறியப்பட்ட நிகழ்வாகவே பெரும்பலான உயிரிழப்புகள் பதிவாகி இருப்பதாக டெல்லி சுகாதாரத்துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இணைநோய்கள் உள்ளவர்களுக்கு கொரோனா பாதிப்பு கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். சமீப காலத்தில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருந்தாலும் வரும் நாட்களில் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதே மருத்துவ நிபுணர்களின் வாதமாக உள்ளது.

மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை
மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிப்பதில் மெத்தனம் காட்டக்கூடாது எனவும் கூறுகிறார்கள். குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் இணை நோய்கள் உள்ளவர்களிடம் தீவிர பாதிப்பை ஏற்படுத்துவதால் மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய நிலை வருகிறது. ஐசியூ சிகிச்சை வரை செல்ல வேண்டிய நிலையும் சில நேரங்களில் மரணத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்து விடுகிறது என்பதால் கூடுதல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும் பெரும்பாலானவை லேசான பாதிப்புகள் என்பதால் மக்கள் பீதிஅடைய வேண்டாம் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

மும்பை
மும்பையில் நேற்று 852 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. கடந்த ஜூலை 1 ஆம் தேதிக்குப் பிறகு ஏற்பட்ட அதிகபட்ச ஒருநாள் கொரோனா பாதிப்பு இதுவாகும். ஆகஸ்ட் மாதத்தில் முதல் இரண்டு நாட்களை தவிர ஏனைய அனைத்து நாட்களிலும் ஒருநாள் பாதிப்பு 400க்கும் அதிகமாகவே பதிவாகி வருகிறது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையும் சீராக உயர்ந்து வருகிறது. நேற்று கொரோனா பாதித்த 852 பேரில் 816 பேருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளது மக்களுக்கு சற்று ஆறுதல் கொடுக்கும் விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி போட வேண்டும்
தொற்று பரவல் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக தொடர்ந்து பதிவாகி வந்தாலும் மக்கள், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கைகளை கழுவுதல் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிலும் பண்டிகை காலம் நெருங்குவதால் தடுப்பூசி போடுவதில் அலட்சியம் காட்டக்கூடாது என்றும் தீவிரமாக அறிவுறுத்தப்படுகிறது.












Click it and Unblock the Notifications