இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - மத்திய சுகாதாரத்துறை புதிய அறிவுறுத்தல்
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 28,246 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 277 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெல்லி : இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த வாரங்களில் 20 ஆயிரத்திற்கும் கீழே பதிவான நிலையில் மீண்டும் 25 ஆயிரம் பேரை தாண்டியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கொரோனா கொடுந்தொற்று பரவத் தொடங்கியது. இந்தியாவில் முதல் அலையை விட 2வது அலை கோரத்தாண்டவம் ஆடி பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. தற்போது கொரோனா 2ம் அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது.
கொரோனா 3வது அலை குறித்த எச்சரிக்கை காரணமாக கொரோனா தடுப்பு பணிகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதேவேளையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். கல்வி நிலையங்கள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வருகிறது. கொரோனாவின் பிடியில் இருந்து உலகம் முழுவதுமாக எப்போது மீளும் என்று யாராலும் சொல்ல முடியாத நிலை உள்ளது.

26,727 பேர் பாதிப்பு
கடந்த வாரங்களில் 18 ஆயிரம் பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று பதிவான நிலையில் இரண்டு தினங்களாக கொரோனா தொற்று உயரத் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 26,727 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. மொத்தம் 3,37,66,707 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3,30,43,144 பேர் குணமடைந்தனர்
இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து 28,246 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் 3,30,43,144 பேர் நாடு முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 277 பேர் மரணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,48,339 பேராக உயர்ந்துள்ளது.

2,75,224 பேர் சிகிச்சை
கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தற்போது 2,75,224 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாடு முழுவதும் 89,02,08,007 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 64,40,451 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். கேரளாவில் மட்டுமே 15,914 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 122 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கவனம் தேவை
ஆயுத பூஜை, விஜய தசமி, மிலாடி நபி மற்றும் நவம்பர் மாதத்தில் தீபாவளி, டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை காலங்கள் வருகின்றன. அப்போது மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பட்சத்தில் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை உயரும் என்ற அச்சம் எழுந்துள்ளது.

கட்டுப்பாடுகள் அவசியம்
இதனிடையே மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், நாட்டில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருகிறது. அதேசமயம் பண்டிகை காலம் நெருங்குவதால், கொரோனா கட்டுப்பாடுகளைத் தீவிரமாக்க வேண்டும். திருவிழாக்கள் மற்றும் பொது இடங்களில் அதிகளவில் மக்கள் கூடினால், அது கொரோனா பரவலுக்கு வழிவகுக்கும். அதனால் கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பது அவசியமாகியுள்ளது.

கண்காணிப்பு அதிகரிப்பு
மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். மக்களும் கவனமுடன் செயல்பட வேண்டும். கொரோனா தடுப்பூசி போடும் பணியை அதிகரிக்க வேண்டும். இது குறித்து மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகங்களுக்கு, அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அறிவுறுத்த வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் 144 தடை உத்தரவைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications